இளவட்டப் பலி

சக்தி விபத்து நடந்த இடத்திலேயே இறந்துவிட்டான் என்பது தெரிந்தபிறகு கவலையெல்லாம் சுரேஸ் பிழைத்துக்கொண்டானா என்பதிலேயே இருந்தது. மாறுபட்ட தகவல்கள் வந்துகொண்டிருந்தன.  பனங்கூட்டத்திலிருந்து திண்டுக்கல்லுக்குப் பேருந்தில் வந்துகொண்டிருந்தபோது திருப்பூரில் இருக்கும்  செல்வக்குமார்தான் முதலில் அலைபேசியில் கூப்பிட்டுச் சொன்னான்: “அண்ணே, கேள்விப்பட்டியா, சுரேசும், வெள்ளையன் மகன் சக்தியும் வண்டில போகும்போது பஸ்ஸுல அடிபட்டுட்டான்ய்ங்களாம்ல”. சுரேசுக்குக் காலில்தான் அடி என்று முதலில் சொன்னார்கள். பிறகு அவனும் இறந்துவிட்டான் என்றார்கள். கவலைக்கிடமாக இருப்பதாக ஒருவரும், பேசிவிட்டானாம் என்று இன்னொருவரும் விசாரித்தபோது கூறினர்.  ஷேர் ஆட்டோவில் ஊரை நெருங்குகையில் ஓட்டுனர் அதே இருக்கையில் பக்கத்தில் ஒடுங்கி உட்கார்ந்திருந்தவரிடம் “இன்னைக்கு அய்யங்குடியில நல்ல ஓட்டம். பூராம் அய்யங்குடி – பெரியாஸ்பத்திரி. ரெண்டு பயலுக ஆக்ஸிடெண்ட் ஆயிட்டான்ய்ங்களாம், ஒருத்தன் அவுட்டாம்” என்றார். பக்கத்தில் இருந்தவர் “ரெண்டு பேரும் காலியாம்ணே. பாலஜோதியில ஓடுறவரு அய்யங்குடிக்கார்தான. அவர் சொன்னாரு” என்றார்.

**************

தெருவுக்குள் நுழைந்தபோது வேறு சாதிக்காரர்களைத் தவிர நடமாட்டம் தெரியவில்லை. எல்லாரும் அரசு மருத்துவனையில் இருப்பார்கள். அப்போதுதான் ஏதோ திருமண வரவேற்புக்குப் போய்விட்டு வந்த ஆறுமுகம் டி.வியைப் போட்டு ‘நீயா நானா’ வைத்த சத்தம் கேட்டது. அவரது மனைவி ஒலியளவைக் குறைத்துவைத்துப் பார்க்கச் சொல்லிக்கொண்டிருந்தார். இரண்டு மூன்று நாட்களுக்கு சன்னமாக வைத்துதான் பார்ப்பார்கள்.

பூவாயம்மன் கோயில் தெருவின் பெயரில் நிதி ஒதுக்கப்பட்டு மேலத்தெருவில் வைக்கப்பட்டிருந்த சிறு மின்விசை நீர்த்தொட்டியின் குழாயைத் திருகிவிட்டு யாரோ குளிக்கும் சத்தம் கேட்டது. முரளிதான் மருத்துவமனையிலிருந்து திரும்பியிருந்தான். அருகில் சென்றபோது உதட்டைப் பிதுக்கி தலையை ஆட்டி ஓசை வெளிவராமல் ‘முடிஞ்சிருச்சு’ என்பதுபோல ஏதோ சொன்னான். அதற்குள் நான்கைந்து பேர் கூடிவிட்டார்கள். அவர்கள் வீட்டு மொட்டைமாடியில் இருந்து சூர்யாவும் எட்டிப்பார்த்தது.  “அப்பயே ஒண்ணும் இல்ல மாமா. இவன்ய்ங்க சும்மா மூக்கில குழாயை மாட்டிவிட்டு வயிறு மட்டும் மேல போய்க்கிட்டு வந்துக்கிட்டு இருந்துச்சு. அப்புறம் ஏழு மணிக்கு இவனையும் மார்ச்சுவரிக்கு எடுத்துட்டுப் போய்ட்டான்ய்ங்க” என்றான்.

அவனுக்குக் கோரத்தை விவரிப்பதில்தான் ஆர்வம் இருந்தது. இருசக்கர வண்டியிலிருந்து தூக்கிவீசப்பட்டு மோதியதில் எப்படி சக்தியின் ஒருபக்க கன்னச்சதை, தலைமுடி, சட்டையெல்லாம் பேருந்திலேயே ஒட்டிக்கொண்டது, அவனைத் தூக்கியபோது உறைந்திருந்த ரத்தக்கட்டி எப்படி ‘பொளக்’கென்று சாலையில் சிந்தியது, பிணவறையில் கொலையுண்டு கிடந்த ஒருவனின் வாயில் நுழைந்த ஈ எப்படி அறுபட்ட கழுத்து வழி வெளியேறியது என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தான்.

******

“பாவம், பிள்ளைகளைலாம் அப்படித் தூக்கிக்கொஞ்சுவான். அவள் அக்கா அக்கானு கையைப் பிடுச்சுகிட்டு விடவேயில்லை. ‘தினமும் மூணு சட்டை மாத்துவானே. செண்ட் போடாம வெளிய கெளம்பமாட்டானே. இப்ப கண்ணாடிகூட அவனை எங்கே எங்கேனு கேட்குமே’னு அழுதுக்கிட்டு கெடக்கா”

 “அவனுக்குப் பெறந்தநாளாம். கத்திரிக்காய் புடிங்கிக்கிட்டுர்ந்தவன இவந்தானாம்ல கூட்டிட்டுப்போனான்”

 “இங்க கடலங்குளத்துக்கும், சடையநல்லூருக்கும் ஊடால இருக்க சந்தனமாரியம்மன் கோயில் வளைவுகிட்டயாம்ல. அந்த மேட்டுல சும்மாவே எதுக்க வர்ற வண்டி தெரியாது”

 “உரப்பொடி வாங்கப் போனான்றாக. காசெடுக்கப் போனான்றாக. இங்கனக்குள்ள சந்தைகிட்டப் போயிருக்கலாம். எதுக்குத்தான் சடையநல்லூருக்குப் போனான்ய்ங்களோ?”

 “ஞாயித்துக்கிழம வந்தாலே இந்த குடியிலதானத்தா கூடிர்றான்ய்ங்க”

யாரும் தூங்கப்போகிற மாதிரி தெரியவில்லை.

******

எதிர்ப்பட்ட கே.ஜே வை நிறுத்தி பாஸ்கரன் விசாரித்துக்கொண்டிருந்தார். “ஞாயித்துக்கெழமைண்ணே. இனிமே எங்க? நாளைக்குத்தான் கொடுப்பாங்க. அதிலயும் இன்னைக்கு ஒரே நாள்ல பதினேழு கேசு. இருக்க தலவலி பத்தாதுன்னு இவன்ய்ங்க வேற பஸ்ல கல்ல விட்டு கண்ணாடியை ஒடைச்சுப்புட்டான்ய்ங்க”

 “அடங்கொ*** **டைகளா. யாரு?”

 “பத்து பதினைஞ்சு பேரு கடலங்குளம் பார்ல இருந்தவன்ய்ங்க. எவன் ஒடச்சான்னு தெரியல. எஸ். ஐ அம்மா ஏதோ உணர்ச்சிவசப்பட்டு செஞ்சுட்டான்ய்ங்கன்னு விடுற மாதிரிதான் இருந்துச்சு. கதிரவன் மகன் லோகு முண்டிக்கிட்டு நாந்தான் ஒடச்சேன். யார் என்ன செய்வான்னு சலம்புன்னான். இப்ப மூணு பேத்த புடிச்சு வைச்சிருக்காங்க. பி.ஆர்.சி மேனேஜர் 13,000 ரூபாயைக் குடுத்திட்டுப் போயிருங்கன்னு அப்பயே சொன்னாரு. ரொம்ப ஆடுறான்ய்ங்கண்ணே.”

 “மில்லுல கூட வேலைபார்த்தவர் காலையிலயே போன் பண்ணாப்ல. என்னண்ணே கடலங்குளம் டாஸ்மாக்ல உங்க ஊர்க்காரன்ய்ங்க ஆட்டம் ஓவராயிருக்குன்னு”

 “நேத்து நன்றி தெரிவிக்க வந்தார்ல”

 “ஓஹோ. அப்படிச் சொல்லுங்க. என்னத்தையோ காசைக்கொடுத்து எப்.ஐ.ஆர், ரிமாண்டுனு இல்லாமக் கூட்டிட்டுவந்துருங்கண்ணே. படிக்கிற பயலுக”

*******

மறுநாள் சுடுகாட்டிலும் ஒரே அலப்பரையாகத்தான் இருந்தது. ‘தண்ணி’ தாராளமாகப் புழங்கியது. வேனிலிருந்து நாங்கள்தான் இறக்குவோம் என்று பதினைந்து இருபது பையன்கள் முண்டியடித்து உள்ளே ஏறினார்கள். அழுதுகொண்டு சுடுகாட்டுக்கூரையைப் பிய்க்க முயன்றார்கள். ‘அவன்ய்ங்களே போய்ட்டான்ய்ங்க. ஒனக்கு செல்ஃபோன் எதுக்கு?’ என்று எவனது செல்போனையாவது பிடுங்கி சிதையில் போட்டுவிட்டால் சும்மா இருப்பார்கள் என்று தோன்றியது.

சுரேசின் அப்பாவிடம் உடன் வேலைசெய்பவர்களுக்கெல்லாம் தகவல் சொல்லிவிட்டதாக ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார். தலையில் துண்டை போட்டு குத்தவைத்து உட்கார்ந்திருந்த சக்தியின் அப்பா ஒருவரிடம் ‘கல்யாணம் ஆகாத இளவட்டப் பயலுகளுக்கெல்லாம் பால் தொளிக்கிற வழக்கமில்லையாம். எல்லாரும் சொல்றாக’ என்று விளக்கிக்கொண்டிருந்தார்.

****

மனோகரன் தினத்தந்தி மாவட்டச்செய்திகளில் விஷயம் வந்திருப்பதைச் சொல்லி சத்தமாக வாசித்தார்:

‘அய்யங்குடி கிராமம் வெள்ளையன் மகன் சக்திவேல் (24). அதே கிராமத்தைச் சேர்ந்த குமரப்பன் மகன் சுரேஸ் (23). இவர்கள் இருவரும் கடலங்குளம் சடையநல்லூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த அரசுப் பேருந்து மோதியது. இதில் சக்திவேல் சம்பவ இடத்திலேயே பலியானார். சுரேஸ் அரசுப் பொதுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையே 108 ஆம்புலன்ஸ் வரத் தாமதமானதால் ஆத்திரமடைந்த பொதுமக்களில் சிலர் அந்த வழியாக வந்த நகரப் பேருந்துமீது கல்லெறிந்ததில் பேருந்தின் பின்பக்கக் கண்ணாடி உடைந்தது. இதுகுறித்து சடையநல்லூர் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்’

அதே பக்கத்தில், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அய்யங்குடி, இப்ராகிம்சந்தை, சந்தோஷ் நகர், முதலைக்குளம் பகுதிகளில் அதற்கு முந்தைய தினம் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டுப் போயிருந்த செய்தியும் வெளிவந்திருந்தது.

மொழிபெயர்ப்பின் தொடுஎல்லை

கடந்த ஜூன் 14,15ல் திண்டுக்கல் நொச்சியோடைப்பட்டியில் எஸ்.ரா-வும் டிஸ்கவரி புக்பேலஸும் இணைந்து கதைகள் பேசுவோம் (2): நாவல் இலக்கிய முகாம் நடத்தியதை நீங்கள் அறிந்திருக்கலாம். அதில் மொழிபெயர்ப்பாளர் சா.தேவதாஸ் மொழிபெயர்ப்பின் சிக்கல்கள் பற்றிய ரோமானியக் கவிதை ஒன்றிருப்பதாகக் குறிப்பிட்டு அதன் சாரத்தைச் சொன்னார்.

கொஞ்சம் தேடியதில் அது மரீன் சொரெஸ்கு எழுதிய ஒரு கவிதை என்றறிந்ததோடு அதன் இரு ஆங்கில வடிவங்களும் கிடைக்கப்பெற்றேன். எனது தமிழ், ஆங்கிலம், கவிநுகர்திறன் ஆகியவற்றின் போதாமைகளை நன்கு உணர்ந்திருந்தபோதும் அதைத் தமிழில் எழுதிப்பார்க்கத் தயங்கவில்லை.  கவிதையே மொழிபெயர்ப்பின் போதாமைகள் பற்றியது என்றுதானே சொன்னார்கள்! அந்தக் கவிதை இங்கே:

 மொழிபெயர்ப்பு

நான் தேர்வெழுதிக்கொண்டிருந்தேன்

வழக்கொழிந்த மொழியொன்றில்

என்னையே மொழிபெயர்க்கவேண்டியிருந்தது

ஒரு மனிதனிலிருந்து மந்தியாக

 

நான் சுற்றிவளைத்துத் தொடங்கினேன்

காட்டிலிருந்து ஒரு பனுவலை

முதலில் மொழிபெயர்த்து

 

என்றாலும், என்னையே நான் நெருங்கநெருங்க

மொழிபெயர்த்தல் மென்மேலும் கடினமாகியது

கொஞ்சம் முயற்சியெடுத்து

சரிமாற்றுச்சொற்களைக் கண்டுபிடித்தேன்

கால்விரல் நகங்களுக்கும்

பாத ரோமங்களுக்கும்

 

முழங்காலுக்கு வரும்போது

திக்கித்திணற ஆரம்பித்தேன்

இதயத்தில், எனது கை நடுங்கியது

கதிரவனில் கறைசெய்துவிட்டேன்

 

சரிசெய்ய முயற்சித்தேன்

நெஞ்சக முடி கொண்டு

கடைசியில் தோற்றுப்போனேன்

ஆன்மாவை அடைந்தபோது

– மரீன் சொரெஸ்கு

கோடைத்திருநாள் அழைப்பு

1942ம் ஆண்டில் நடந்த கள்ளழகர் சித்திரைத் திருவிழா அழைப்பிதழ் (கோடைத்திருநாள் என்னும் சைத்ரோத்ஸவ பத்திரிக்கை) ஒன்றின் ஒளிமேவல் கோப்பு நண்பன் ஒருவன் மூலம் காணக்கிடைத்தது. சற்று கடிதின் முயன்றால் வாசித்துவிடலாம்.

 இந்த அழைப்பிதழ் தயாரிக்கப்பட்டது மார்ச் ’42ல். அப்போது இரண்டாம் உலகப்போர் தொடங்கியிருந்தது. எனவே இரவு நேரங்களில் கொண்டாட்டம் எதுவும் திட்டமிடப்படவில்லை. எதிர்சேவை பிற்பகலில் நடந்திருக்கிறது. மூன்றுமாவடியில் 2.30க்குக் கிளம்பி தல்லாகுளத்துக்கு 3.30க்கு வந்துவிட முடிந்திருக்கிறது. மாலை 6.30க்குள்ளாக தல்லாகுளம் பெருமாள் கோயிலில் இராத்தங்கல் தொடங்கியிருக்கிறது. காலை 5மணிக்குப் பிறகுதான் குதிரை கிளம்பியிருக்கும். வைகை ஆற்றில் இறங்க முற்பகல் 11 மணி என்று நேரம் குறித்திருக்கிறார்கள். அதுபோலவே தசாவதாரத்தில் மோகனாவதாரத்தைத் தவிர பிறவற்றைப் பிற்பகலிலேயே முடித்துவிடுமாறு திட்டம் வகுத்திருக்கிறார்கள். இவ்வாறு ‘இராஜீகத்தாலும், தெய்வீகத்தாலும், மற்றும் எதிர்பாராமல் ஏற்படும் மாறுதல்களுக்கு தேவஸ்தானம் ஜவாப்தாரியல்ல’ என்று தெளிவாகவே சொல்லியிருக்கிறார்கள்.

 ‘இடையிலுள்ள இதர மண்டபங்களில் பெருமாள் 3 நிமிஷம் எழுந்தருளு’மளவுக்கு பெருமாளுக்கு அவகாசம் இருந்திருக்கிறது. சீர்பாதந்தாங்கிகளுக்குப் பொறுமை இருந்திருக்கிறது. மண்டபங்கள் குறைவாக இருந்திருக்கின்றன.

 தூங்காநகரின் இயல்பான இரவுவாழ்க்கையை இரண்டாம் உலகப்போர் பாதித்திருந்தாலும் கோடைத்திருவிழாவின் உற்சாகம் மட்டும் குன்றியிருக்காது என்று உறுதியாக ஊகிக்கலாம்.

1942 Invitation Chiththirai Festival

அறிக! நீ ஒரு ___________.

உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் என்கிறார்கள். தன்னைத் தானும் அறிந்துகொண்டு ஊருக்கும் சொல்லிவிட்டால் தலைவன் ஆகிவிடலாம் என்கிறார்கள். தெய்வம் நீயென்றுணர் என்று ஒரு ஆள் பட்டையைக் கட்டி ஏத்திவிடுகிறார். இன்னும் ‘நான் யாரு எனக்கேதும் தெரியலியே’ என்று புலம்பக்கூடிய ஆளாகவே இருக்கிறேன். ‘உன்னை நான் அறிவேன்; என்னை அன்றி யாரறிவார்’ என்று உரிமை கொண்டாடத்தக்க ஆட்கள் இல்லாத நிலையில் அடிக்கடி எனது ஆளுமைக்கூறுகளை அறிந்துகொள்ள ஏதாவது பரிசோதனைகள் இலவசமாகக் கிடைக்கிறதா எனப் பார்ப்பது வழக்கம். (உண்மையான நோக்கம் மனநிலை இன்னும் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறதா என்று பார்ப்பது). அப்படித் தேடும்போது சிக்கியதுதான் ஆளுமையின் ஐம்பெருங்களங்களைச் சோதித்தறிகிற இந்த ஐபிஐபி-என்ஈஓ 5- காரணி தேர்வு. 

300 கூற்றுக்கள் அடங்கிய நீண்ட வடிவமும் இருக்கிறது. 120 கூற்றுக்களே உள்ள சுருக்கிய வடிவமும் இருக்கிறது. உங்களுக்கு இருக்கும் நேரத்தைப் பொறுத்து ஏதாவதொன்றைத் தெரிவு செய்யலாம். அதிகபட்சம் முக்கால் மணிநேரம் ஆகும். கூற்றுக்கள் இப்படி இருக்கும்: “தேசியகீதம் இசைக்கப்படும்போது எழுந்து நிற்பது எனக்கு விருப்பமானது”. இந்தக் கூற்று ‘மிகவும் துல்லியமற்றது’, ‘ஓரளவு துல்லியமற்றது’, ‘துல்லியமென்றொ, அல்லவென்றோ சொல்லவியலாது’, ‘ஓரளவு துல்லியமானது’, ‘மிகவும் துல்லியமானது’ என்று உங்கள் தெரிவைச் சொடுக்கவேண்டும். சோதனையின் முடிவில் 5 பெரும் ஆளுமைப் பரிமாணங்களில், அவற்றின் 30 துணைக்கூறுபாடுகளில் நீங்கள் மற்றவர்களோடு ஒப்பிடுகையில் எப்படிப்பட்டவர் என்பது பற்றிய அறிக்கை கிடைக்கும்.

இதை உளநோய் இருக்கிறதா என்று கண்டறிகிற சோதனையாக எல்லாம் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று தெளிவாக துவக்கத்திலேயே சொல்லப்பட்டுள்ளது. கவனிக்கவேண்டும், இதில் சொல்லப்படுவதெல்லாம் உங்கள் பாலினம், வயது உள்ளவர்களோடு ஒப்பிட்டால், ஒரு குறிப்பிட்ட பண்பு உங்களிடம் ஒப்பீட்டளவில் குறைவாக/ சராசரியாக/ அதிகமாக இருக்கிறதா என்பதுதான். எந்த ஒரு பண்பும் குறைவாக அல்லது அதிகமாக இருப்பதுதான் சரி என்று அறுதியிட்டெல்லாம் கூறிவிடமுடியாதாம். பல செயல்களுக்கு அந்த ஒரு குறிப்பிட்ட ஆளுமைக்கூறு தொடர்பேயற்றதாக இருக்கலாம். சில செயல்களுக்கு அதிகம் தேவைப்படலாம். சிலவற்றுக்குக் குறைவாக.

அந்த ஐம்பெருங்களங்களும், அவற்றின் 30 துணைக்களங்களுந்தான் என்னென்ன:

1)   புறநோக்குத்தன்மை (Extraversion):

                     i.        எளிதில் நட்புகொள்ளும் தன்மை (Friendliness)

                    ii.        கூட்டம்நாடும் தன்மை (Gregariousness)

                  iii.        உறுதிபட நிற்கும் தன்மை (Assertiveness)

                   iv.        செயல்பாட்டு அளவு (Activity level)

                    v.        மனவெழுச்சி நாடும் தன்மை (Excitement seeking)

                   vi.        மகிழ்வுபொங்கும் தன்மை (Cheerfulness)

2)   ஏற்றுக்கொள்ளத்தக்கவராகத் திகழ்தல் (Agreeableness):

                     i.        நம்பகம் (Trust)

                    ii.        நன்னெறி (Morality)

                  iii.        பொதுநல நோக்கு (Altruism)

                   iv.        ஒத்துழைத்தல் (Cooperation)

                    v.        தன்னடக்கம் (Modesty)

                   vi.        இரக்கம் (Sympathy)

3)   நெஞ்சங்கோடாமை / விவேகம் (Conscientiousness / Prudence):

                     i.        செயல்முடிக்குந்திறன் (Self – efficacy)

                    ii.        ஒழுங்குமுறை நாடுதல் (Orderliness)

                  iii.        கடமையுணர்ச்சி (Dutifulness)

                   iv.        சாதிக்கும் முனைப்பு (Achievement – striving)

                    v.        சுய கட்டுப்பாடு (Self – discipline)

                   vi.        எச்சரிக்கையுணர்வு(Cautiousness)

4)   எதிர்மறை உளப்பாங்கு (Neuroticism):

                     i.        பதற்றம் (Anxiety)

                    ii.        சினம் (Anger)

                  iii.        உளச்சோர்வு (Depression)

                   iv.        தன்னுணர்வு (Self-consciousness)

                    v.        மட்டுப்படுத்த இயலாமை (Immoderation)

                   vi.        பாதிப்புக்குள்ளாகும் தன்மை (Vulnerability)

5)   திறந்தமனத்தோடு அனுபவம்நாடல் (Openness to Experience):

                     i.        கற்பனை வளம் (Imagination)

                    ii.        கலையார்வம் (Artistic interests)

                  iii.        உணர்ச்சிவயப்படல் (Emotionality)

                   iv.        சாகசம் நாடல் (Adventurousness)

                    v.        மதிநுட்பம் (Intellect)

                   vi.        தாராளவாதம் (Liberalism)

துறைசார்ந்த பயிற்சி உடையவன் அல்லேன் என்பதால் கூறுபாடு, பரிமாணம், களம், நாடல், தன்மை என்றெல்லாம் குண்டக்க மண்டக்க வார்த்தைகளை இறைத்திருக்கிறேன். சற்று எச்சரிக்கையோடு அணுகவும்.

எல்லாம் நமக்கு ஏற்கனவே தெரிந்ததுதான் என்று தோன்றுவதிலிருந்தே இந்த சோதனையின் நம்பகத்தன்மை உறுதியாகிறது. சில தெளிவான சொற்களில், சுருக்கமான விளக்கங்களோடு என்னைப் பற்றிய அறிதலை விரிவாக்கியிருக்கிறது. இப்போது நான் கவனம் செலுத்தவேண்டிய சில கூறுகள் எவ்வெவை என்று சற்று துலக்கமாகிறது.

ஜான் ஏ. ஜான்சனுக்கு நன்றி.

வேலூர் சீனிவாசனார்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ‘சத்யமேவ ஜெயதே (அமீர்கான்)’ புகழ் வேலூர் சீனிவாசன் பேசுகிறார் என்றார்கள். எல்லாத் துறையிலும் கால்பரப்பி நிற்கும் ஒரு பெருநிறுவனம் ஏற்பாடு செய்த விழா என்பதால் கொஞ்சம் சந்தேகத்தோடுதான் போனேன். உள்ளே நுழைந்தபோது யுனிசெஃப் ஆவணப்படுத்திய இந்த குறும்படத்தைக்  காட்டி வேலூரில் எப்படி ‘வீண்பொருள் இல்லா மேலாண்மை’யை வெற்றிகரமாக செயல்படுத்தினார்கள் என்பதை விளக்கிக்கொண்டிருந்தார். பிறகு பவர்பாயிண்ட் காட்சியின் துணைகொண்டு பலவற்றை ஆங்கிலத்தில் விளக்கினார். விஷயமும், வேகமும் இருக்கிற ஒரு உற்சாகம் கொப்பளிக்கும் பேச்சுக்கு இலக்கண சுத்தமெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்பது புரிந்தது.

முழுக்க முழுக்க செயல்பாட்டின்புறத்துப் பிறந்த பட்டறிவு கொண்டு பேசினாலும் அளவைகளும், புள்ளிவிவரங்களுமாய் அறிவியல்ரீதியான விளக்கங்கள் தந்தார். மட்குவது எது மட்காதது எது என்று பட்டியல். ஒவ்வொன்றும் எத்தனை விழுக்காடு என்றொரு பகுப்பாய்வு. எது எவ்வளவு நேரத்தில் சிதையத் தொடங்கும் என்று ஒரு கணக்கு. எந்த ஒரு கட்டுமானமும் எவ்வளவு நீள, அகல, உயரம் இருக்கவேண்டும் என்று ஒரு விளக்கம்.

மேலே குறிப்பிட்டிருந்த ஆவணப்படத்துக்கு ‘Garbage to Gold’ என்று எப்படிப் பெயர் வைத்தார்கள் என்பதை சுவைபட விளக்கினார். பல பெயர்களைப் பரிசீலித்துக் கொண்டிருந்தார்களாம். அப்போது அவ்வழியாக இவர்கள் அமைப்பில் பணிபுரியும் ஒரு பெண் கடந்துசென்றிருக்கிறார். அவரது காதுமடலெல்லாம் தங்கம். ஏனென்று கேட்டிருக்கிறார்கள். என் காது ஒரு பாதுகாப்புப் பெட்டகம் மாதிரி. என் கணவர் குடிகாரர் என்பதால் குப்பைசேகரித்து சிறுகச் சிறுக சம்பாதித்த பணத்தை நகையாக்கிக் காதில் மாட்டிவிட்டால் பத்திரமாக இருக்கும். தேவைப்படும்போது அடகு வைத்துக்கொள்வேன். பணம் இருக்கும்போது மீட்டுக்கொள்வேன். வேறெங்காவது வைத்தால் அவர் எடுத்துவிடுவார் என்றாராம். அதிலிருந்தே அப்படியொரு தலைப்பு இவர்களுக்குத் தோன்றியிருக்கிறது. 250 குடும்பங்களுள்ள ஒரு பகுதியில் இந்த திட்டத்தை செயல்படுத்தும்போது வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள இதுமாதிரி நான்கு குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெறும்.

கண்ணைக் கூட இறந்த ஆறுமணி நேரத்துக்குள் எடுத்தால் அடுத்த ஆளுக்குப் பயன்படுத்தமுடியும். அதுபோலத்தான் நமக்கு பயன்பாடு இல்லையென்பதாலேயே ஒரு பொருள் வீணானதாகிவிடாது. அது மக்க / அழுகத் தொடங்க நேரமாகும். அதற்குள் அதை சேகரித்துவிட்டால் வேறெதற்காவது பயன்படும். எடுத்துக்காட்டாக காய்கனிக்கழிவு கால்நடைத் தீவனமாகவும், உறித்த எலுமிச்சை / ஆரஞ்சுத் தோல் சிகைக்காயுடன் சேர்த்து அரைத்தால் பாத்திரம் விளக்கவும் பயன்படும். நாற்றமும் இருக்காது என்பதால் அகற்றுவது இழிவான வேலையாகவும் இருக்காது. எனவே வீட்டிலேயே குப்பைக்கூடை நிரம்பும்வரை வைத்திருந்து பிறகு தொட்டியில் விட்டெறிந்து அதை அவர்கள் இரண்டு நாள் கழித்து எடுத்து எங்காவது கொண்டுபோய் கொட்டுவதற்குப் பதில் உடனுக்குடன் சேகரித்தால் குப்பையில் கொட்டிக்கிடக்கும் செல்வத்தை பயனுள்ள வகையில் நாம் அடையலாம் என்பதை விளக்கினார்.

அம்பு தைக்கிற மாதிரி கருத்து சொல்கிறார். விளக்கேற்றிய பிறகு குப்பை சேகரிப்பது சவாலாக உள்ளது. வீட்டிலுள்ள லெட்சுமி வெளியேறிவிடுவாள் என்று குப்பையைப் போட மறுக்கிறார்கள். ஆனால் பகலில் அதே குப்பையை லெட்சுமி என்றுணராமல் தொட்டியைச் சுற்றி எறிகிறார்கள் என்றார். சொல்லும்போதே திரையில் ஒரு நிழற்படம் காண்பித்தார். அதில் குப்பையில் லெட்சுமி படம் போட்ட நாட்காட்டி அட்டை கிடக்கிறது. பிரிக்கப்படாத குப்பை கொட்டப்பட்டிருப்பதைக் காட்டி திருப்பதி உண்டியலைத் திறக்கும்போதுகூட இப்படித்தான் பலவகை ரூபாய் நோட்டுகள், நாணயங்கள், நகைகள், தாலிச்சரடு, கிரீடம் என்று கிடக்கும். பிரித்து அடுக்கினால் அத்தனையும் பணம் என்று சொல்லிவிட்டு அதுபோல பிரிக்கப்பட்ட குப்பைகள் உள்ள படத்தை அடுத்துக்காட்டுகிறார்.

மட்குபவை உரமாகின்றன. மட்காதவை மறுசுழற்சிக்குப் போகின்றன. எந்த ஒரு பொருளும் வீணாவதில்லை. அவருக்காக மண்புழுக்களும், மாடுகளும், வாத்துகளும் வேலைபார்க்கின்றன. வானுக்குக் காக்கை, நிலத்துக்குப் பன்றி என்றால் நீரைத் துப்புரவு செய்ய வாத்துக்கள். மீன் சந்தைக் கழிவுகள் அவற்றுக்கு உணவு. காய்கறிச் சந்தையில் எஞ்சியவை உடனுக்குடன் எடுத்துவரப்பட்டு கொட்டப்படுகின்றன. காத்திருந்த மாடுகள் ‘காலை முகூர்த்தத்தில் கல்யாணம் முடிய பந்திக்குப் பாயும்  உறவினர்கள்’போல விரைகின்றன. ஓரிரு மணிக்குள் ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிடுகின்றன. பிறகு பாலும், சாணமும், கோமியமும் தருகின்றன. இவற்றிலிருந்து பலவகைப் பொருட்கள் கிடைக்கின்றன. சுழற்சி உறுதிசெய்யப்படுவதால் அப்புறப்படுத்தல் என்பது இல்லை.

காட்டுக்குள் கால்நடைகள் இறந்து அழுகிக் கிடக்கின்றன. அவற்றின் வயிற்றைப் புரட்டிப் பார்த்தால் உள்ளே அடுக்கடுக்காக பாலித்தீன் பைகள். வாசம் பார்த்து உண்ணும் அவை காய் வைத்திருந்த பையிலும் அதே வாடை அடிப்பதால் தின்றுவிட்டு மடிகின்றன. பிளாஸ்டிக் ஆர்க்டிக் வரை பரவியிருக்கிறது. ஆச்சி வைத்திருந்த சுருக்குப்பை போல அல்லது பெரிய பூசாரி திருநீறு மடித்துவைத்திருந்த பைபோல ஒரு சிறிய பை ஒன்றைக் காண்பித்தார். அதில் உள்ள கொக்கியைப் பயன்படுத்தி கால்சட்டையில் அடையாள அட்டையைத் தொங்கவிடுவதுபோல மாட்டிக்கொள்ளலாம். தேவைப்படும்போது உள்ளே இருப்பதை இழுத்துவிரித்தால் பெரிய துணிப்பை ஒன்று கிடைக்கிறது. பயன்படுத்திவிட்டு மடித்துச் சுருக்கிவைத்துவிடலாம். இதன்மூலம் வாழ்நாளில் ஒருவர் 22,000 பாலித்தீன் பைகளைத் தவிர்க்கமுடியும். திசுத் தாள் கலாச்சாரத்தில் மூழ்காமல் கைக்குட்டைப் பண்பாட்டைக் கடைப்பிடியுங்கள் என்றார். அவர் கால்சட்டைப்பையில் இரு புறமும் கைக்குட்டைகள் இருந்தன. உணவருந்திவிட்டு கையையும், வாயையும் துடைக்க வலதுபுறம் ஒன்று. மூக்கு சிந்திவிட்டுத் துடைக்க, மூடிக்கொண்டு தும்ம என்று இடதுபுறம் ஒன்று.

அமெரிக்காவில் குப்பை அகற்றுகிறேன் என்ற பெயரில் நகருக்கு வெளியே 350 – 500 கிமீ தொலைவில் கொண்டுபோய் 45 ஹெக்டேர் பரப்புள்ள ‘அறிவியல்பூர்வமான’ கிடங்கில் கொட்டுகிறார்கள். இதுமாதிரி நிலத்துக்குக் கீழே 80 அடியும், மேலே 100 அடியுமாக நிரம்பிக்கிடக்கும் 1800 குப்பை மலைகள் இருக்கின்றனவாம். அதைப் போய் பார்த்துவந்து நம்மாட்கள் காப்பி அடிக்கிறார்கள். நியூயார்க் குப்பை கொட்டப்படும் இடத்துக்குமேலும் நம்மூர் போலவே பறவைகள் வட்டமிடுகின்றன. ஒரே வித்தியாசம் நம்மூரில் 5 ட்ரக்குகளில் எடுத்துச்செல்லப்படும் குப்பையை அவர்கள் ஒரே கண்டெய்னரில் எடுத்துச்செல்கிறார்கள். இல்லாவிட்டால் நடுக்கடலில் கொண்டுபோய் கொட்டுகிறார்கள். அவ்வளவுதான் என்றார். இவர்கள் பயன்படுத்தும் முறைகள் மரபார்ந்தவை, உள்ளூர் தொழில்நுட்பம் கொண்டவை.

கோவை சூலூரில் மாடித்தோட்டம் போடப்பட்டுள்ளதைக் காண்பித்தார். 69 வகையான கீரைகளில் 43 ஐ மாடியிலேயே வளர்க்கமுடியும். 110 வகைப்பட்ட காய்கறிகளில் 75 – 80 வகைகள் வரை மாடித்தோட்டத்திலேயே உற்பத்தி செய்ய முடியும். வீடும் குளிர்சாதனம் பொருத்தாமலேயே குளிர்ச்சியாக இருக்கும்.

நிகழ்ச்சி நடந்தது கட்டுமானத் துறை சார்ந்த இடத்தில். எனவே இறுதியாக நாம் செங்கல், சிமெண்ட், எஃகு கொண்டு என்னதான் கட்டினாலும் அதிகபட்சம் சிலநூறு வருடங்கள் இருக்கும். இயற்கையான நீடிக்கத்தக்க உயிருள்ள கட்டிடக்கலையான மேகாலயாவின் இந்த உயிர்த்திருக்கும் பாலங்களை இதுவரை பார்த்திராதவர்கள் பாருங்கள் என்று இந்தப் படத்தைக் காண்பித்து உரையை நிறைவு செய்தார்.

கரையாத கரகமும் உயிர்பெற்ற சிரசும்

ஒரு காலத்தில் கோபக்கார முனிவன் ஒருவன் காட்டில் தனது மனைவி, ஐந்து பிள்ளைகளுடன் வசித்துவந்தான். வயது ஏறியதே தவிர மனைவியை முழுமையாக நம்பினானில்லை. அவளது நன்னடத்தையை உறுதிசெய்து கொள்ள ஒரு வழி கண்டுபிடித்து வைத்திருந்தான். அவள் தினமும் ஆற்றிற்கு தண்ணீர் எடுக்க வெறுங்கையோடு செல்லவேண்டும். கரையில் இருக்கும் பச்சை மண் எடுத்துக் குடம் செய்து அதில் தண்ணீர் மொண்டு வரவேண்டும். அவள் கற்புநெறி தவறாமல் இருந்தால் குடம் கரையாமல் நிற்கும். அப்படித்தான் ரொம்ப நாளாய் நின்றது.

சோதனையாக ஒரு நாள் அவள் தண்ணீர் கோர குனியும்போது அப்போது பார்த்து வானில் பறந்துசென்ற அழகர்கள் நீரில் தெரிய இமைப்பொழுது அசந்துவிட்டாள். அதுதான் சாக்கு என்று குடம் கரைந்துவிட்டது. பயந்துபோன கிழவி கிழவனுக்குப் பயந்து காட்டிலேயே பொழுதுபோக்கினாள். அவள் திரும்பிவரக் காணாத முனிவன் தனது தவவலிமையை இந்த தலைபோகிற காரியத்துக்குப் பயன்படுத்தி என்ன நடந்தது என்று கண்டுபிடித்துவிட்டான். மூத்த பிள்ளைகளை ஒவ்வொன்றாக அழைத்து தாயைத் தேடி தலையைக் கொய்யச் சொல்ல அவர்கள் ஒவ்வொருவரும் மறுத்து கல்லாய்ச் சபிக்கப்பட்டார்கள். அப்பனுக்குத் தப்பாமல் பிறந்த கடைசிப்பிள்ளை கல்லாகப் பயந்தோ என்னவோ தாயைக் கொல்ல கோடரி கொண்டு ஓடியது.

அங்கு அவளோ ஆவாரங்குலை சேகரிக்க வந்த நம்மன்னை பின் சென்று ஒளிந்தாள். அடைக்கலம் நாடி வந்தவருக்கு அபயம் அளிக்கும் நம்மன்னை என்னைக் கொன்றுவிட்டுப் பின் உன் அன்னையைக் கொள் என்றார். அந்த மூடனும் இருவரையும் வெட்டிச் சாய்த்ததோடு நில்லாமல் அப்பன் நம்பமாட்டானே என்று தாயின் தலையைக் கையோடு எடுத்துச் சென்றான்.

சொன்னதைச் செய்துவிட்டானே சொட்டைவால் குட்டி என்று மகிழ்ந்த அப்பன்காரன் இரண்டு வரம் தருவேன், என்ன வேண்டும் கேள் என்றான். தான் ஆடாவிட்டாலும் தன் சதையாட முதல் வரமாக அண்ணன்களை உயிர்ப்பிக்கவேண்டும் என்றான். அவ்வாறே செய்தான். இரண்டாவது வரமாக தனது அம்மையை உயிர்ப்பிக்க வேண்டும் என்றான். தலையைக் கொண்டுபோய் உடலோடு ஒட்டு, உயிர்த்துக்கொள்ளும் என்றான். இவனும் தலையைத் தூக்கிகொண்டு தலைதெறிக்க ஓடினான். எவளென்று தெரியாவிட்டாலும் அவளைக் காப்பாற்ற உயிர்விட்டாரே நம்மன்னை. அவரைப்பற்றி அப்போதும் நினைத்தானில்லை. ஆனால் இயற்கை நினைத்தது.  அவசரத்தில் நம்மன்னை உடலில் அவன் அன்னை தலையைவைத்து உயிர்ப்பித்துவிட்டான்.

அறியாத ஒருத்திக்காக முதலில் சிரசு தந்தார், பிறகு உடலும் தந்தார்  நம்மன்னை. அது அந்த யுகத்தின் தர்மம்.