நைஜீரியாவில் நடந்திருக்கிறது இது. நைஜீரிய மின்திறன் முதன்மை நிறுவனத்துக்காக 2003 முதல் 2007 வரை இறக்குமதி செய்யப்பட்ட பல கோடி மதிப்புள்ள மின்கருவிகள் உரிய இடங்களுக்கு எடுத்துச்சென்று நிறுவப்படாமல் அபாபா உள்ளிட்ட துறைமுகங்களில் அப்படி அப்படியே கிடந்திருக்கின்றன. இவ்வாறு கிட்டத்தட்ட 248 சரக்குப்பெட்டகங்கள் நிறைய சாதனங்கள் 11 ஆண்டுகள் வரை முடங்கி இருந்திருக்கின்றன. இவை 330கி.வோ வரை அதிஉயர் மின்னழுத்தத்தில் செயல்படக்கூடிய மின்னோட்ட / மின்னழுத்த மாற்றிகள் உள்ளிட்டவை. இப்போதுதான் விழித்துக்கொண்டுள்ளார்கள்.
மின்துறை தனியார்மயமாக்கப்பட்டு இப்போது நைஜீரிய மின்திறன் முதன்மை நிறுவனம் செயல்பாட்டில் இல்லாத நிலையில் இவையெல்லாம் நைஜீரிய மின்கடத்துகை நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உரிய இடங்களில் நிறுவப்படும் என்றிருக்கிறார் கூட்டரசின் மின்துறை அமைச்சர். சுங்கத்துறை பெரிய மனது பண்ணி சுணக்கக் கட்டணம் எல்லாம் எதுவும் இல்லாமல் 248 பெட்டகங்களில் உள்ள கருவிகளை ஒப்படைக்க சம்மதித்துள்ளதாம்.
பல கேள்விகள் எழுகின்றன. இவை குறிப்பிட்ட திட்டங்களுக்காக வாங்கப்பட்டவை. அத்திட்டங்களை செயல்படுத்தப் பொறுப்பானவர்களை யாருமே கேள்வி கேட்கவில்லையா? ஏற்றுமதி செய்தவர்களுக்கான முழுப்பணமும் பொருள் உரிய விதத்தில் நிறுவப்படும் முன்பே போய்ச்சேர்ந்துவிட்டதா? இந்தக் கருவிகள் இத்தனை ஆண்டுகள் இவ்விதம் கேட்பாரற்றுக் கிடந்த நிலையில் இனியும் வேலை செய்யும் நிலையில் இருக்குமா? இவை இயங்குவது பாதுகாப்பானதா? இன்னும் பல.
கடைசியாக ஒரு கேள்வி. இம்மாதிரியெல்லாம் நமது நாட்டில் நடப்பதே இல்லையல்லவா?!