கொந்தகைக்காரர்கள் கோவித்துக்கொள்ளக் கூடாது

நமது கொந்தகை பழமையான ஊர்தான். இப்போது அருகிலுள்ள கீழடியில் அகழாய்வு நடப்பதால் மணலூரும், கொந்தகையும் அடிக்கடி செய்தியில் அடிபடக் காண்கிறோம்.

கொந்தகை பெயர்க்காரணம் பற்றி எனக்கு கொஞ்ச நாளாகவே ஐயம் உண்டு. குந்திதேவிச் சதுர்வேதி மங்கலம்தான் கொந்தகை ஆகிவிட்டது என்கிறார்கள். இருக்கலாம். சீதேவி பூதேவி உடனுறை தெய்வநாயகப் பெருமாள் கோயில் கொண்டிருக்கும் அவ்வூரில்தான் திருமலை ஆழ்வார் எனப்படும் திருவாய்மொழிப்பிள்ளை பிறந்தார் என்கிறார்கள். அதிலும் குழப்பம் இல்லை.

ஆனால் தனியாக திருவாய்மொழிப் பிள்ளையின் அவதார ஸ்தலம் பற்றித் தேடினால் அது பாண்டிய நாட்டிலுள்ள குண்டிகை என்கிறார்கள். அதனால் இயல்பாகவே குண்டிகைதான் கொந்தகை ஆகிவிட்டதோ என்ற ஐயம் எழத்தான் செய்கிறது. சொல்லக் கூச்சப்பட்டுக்கொண்டு குந்திதேவியை மட்டும் சொல்கிறார்கள் போலும்.

கொந்தகை பெயர்க்காரணத்துக்கு இப்போது இழுத்துவிட்டவை ‘சிற்றிலக்கியங்கள்’ கட்டுரை நூலில் நாஞ்சில் நாடன் எழுதியிருக்கும் இந்த வரிகள்தான்:

பொருள் புரிந்தும் புரியாமலும் திகைத்து நிற்கும் பாடல்களும் உண்டு.

குறை கொண்டு, நான்முகன் குண்டிகை நீர்பெய்து

மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி – கறை கண்ட

கண்டத்தான் சென்னிமேல் ஏறக்கழுவினான்

அண்டத்தான் சேவடியை ஆங்கு

என்பது பாடல்.

‘நான்முகன் குண்டிகை நீர் பெய்து’ எனும் தொடரில் குண்டிகை எனில் கமண்டலம் என்று தமிழ் லெக்சிகன் கூறுகிறது. ‘நான்முகன் குண்டி கை நீர் பெய்து’ என்று பிரித்தால் அதற்கு ஆழ்வார் பொறுப்பில்லை…

(எனக்கு ஏன் இந்த அற்ப சந்தோசம்?)

பயிற்சிகள் பலவிதம்

கடந்தவாரம் மதுரையின் பொதுச்சுவர்களை அலங்கரித்த விளம்பரங்களில் ஒன்று. (செய்முறைப் பயிற்சி இருந்ததா என்ற தகவல்கள் கம்பெனியாரிடம் இல்லை)

Aanmeega Payirchi

வழிகாட்டிக் கொள்கைகள்

பதினோராவது படிக்கும்போதும் எங்கள் பள்ளிக்கு ஒருநாள் ஆய்வாளர் வருவதாக இருந்தது. எங்கள் ஆசிரியர் ஜான் தன்ராஜ் வகுப்பறையில் கிழக்கு பார்த்து சும்மாயிருக்கும் கரும்பலகையில் ‘நமது வகுப்பின் வழிகாட்டிக் கொள்கையை அழகாகப் பெரிதாய் வண்ணச் சாக்கட்டிகள் கொண்டு எழுது’ என்று பணித்தார். அது என்ன கொள்கை என்று அன்றுதான் எங்களுக்குத் தெரியும். “உன்னதமே நோக்குக” என்ற சுருக்கமான வாசகம்தான் அது. விவிலிய வசனமாக இருக்கக்கூடும். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளலின் ஒரு வடிவம் என்று மொழிமாற்றிப் புரிந்துகொண்டேன். அதுபோல “நீதியும் அன்பும் நிலைத்திடவே” என்று பள்ளிக்கும் ஒரு குறிக்கோள் செய்தி இருந்தது. அவற்றின் அருமை அப்போது புரியவில்லை.

அதுபோல படித்த கல்லூரியின் இலச்சினையில் “வினையே உயிர்” என்ற செய்தி இருக்கும். எத்தனை இன்றியமையாத செய்தி! ஒருநாள் மாற்று ஆசிரியராக வகுப்பறையைக் கட்டுக்குள் வைக்க வந்த இளையர் ஒருவர் ‘ஒவ்வொருவராய் உங்கள் இலட்சியத்தைச் சொல்லுங்கள்’ என்று நேரம்போக்கிக் கொண்டிருந்தார். ‘வெந்ததைத் தின்று விதிவந்தால் சாதல்’ என்று சொல்லிவிட்டுப் பெருமிதத்தோடு அமர்ந்தேன். “ஏற்றுக உலையே! ஆக்குக சோறே!” என்று துடிக்கவேண்டிய வயது. போகட்டும். படித்துமுடித்து பல ஆண்டுகள் கடந்துபின்னும் பள்ளியும் கல்லூரியும் செயலின்மையை விரட்ட இதோ வழிகாட்டுகின்றன. வினையே உயிர்! உன்னதமே நோக்குக!

இடிக்கும் அர்ச்சுனனுக்கும் என்ன தொடர்பு?

வனவாசத்தின்போது அர்ச்சுனன் காளபைரவ வனத்தில் கடுந்தவம் செய்யத் தொடங்கினான். எழுபதடிக் கம்பம் ஒன்றை நட்டு அதன்மேல் இளநீர் ஏழை வைத்து அவற்றின்மேல் ஏழு விளாம்பழங்களை வைத்தான். விளாம்பழங்களுக்குமேல் ஏழு எலுமிச்சைகளை வைத்து அவற்றின்மேல் ஏழு கொட்டைப்பாக்குகளையும் அதற்குமேல் ஏழு குன்றிமணிகளையும் வைத்தான். குன்றிமணிகளுக்குமேல் ஏழு கடுகுகளை வைத்தான். இவையும் போதாதென்று கடுகுகளுக்குமேல் ஏழு செப்பூசிகளை வைத்து அதன்மேல் ஏறிநின்று செய்த கோரத்தவம் அது. தவத்தின் உக்கிரத்தால் வெப்பம் தகித்தது. பொறுக்க முடியாத தேவர்கள் அவனது தவத்தைக் கலைக்கும் முயற்சியில் இறங்கினர். அப்போதுதான் மேகராசன் அவனுக்குத் தன் மகள் மின்னொளியாளை மணமுடித்துக் கொடுத்து, இடி அஸ்திரமும் கொடுத்து, கலியுகத்தில் அர்ச்சுனன் பெயரைச் சொன்னாலே காததூரம் தள்ளிப்போய் இடிவிழும் என்ற வரத்தையும் கொடுத்தான்.

மன்னன்  படத்தில் விஜயசாந்தி ஏன் “அர்ஜூனன்தான் அஞ்சுகின்ற அல்லிராணி என் ஜாதகம்” என்று பாடுகிறார்?

அல்லி மதுரைக்காரி. குழந்தையில்லாத பாண்டியனுக்கு அல்லிமலர்ப் பொய்கையில் கிடைத்தவள். நீள்முகனைக் கொன்று ஆட்சியைப் பிடித்த வீரப்பெண். பேரழகி. ஆண்வாடையே ஆகாதவள். அவளிடம் மயங்கிய அர்ச்சுனன் சூழ்ச்சிசெய்து அவளுக்குத் தெரியாமலேயே அவள் கழுத்தில் தாலிகட்டிவிட்டுப் பயந்து ஓடிவிட்டான். அவனுக்குப் பரிந்துவந்த வீமனும், கண்ணனும் வெட்கங்கெட்டுப் புறமுதுகு காட்டி ஓடினர். பிறகு இன்னொரு சூழ்ச்சிமூலந்தான் அவளைச் சிறைப்பிடித்து அர்ச்சுனன் மணந்தான். அவனுக்கு இதுபோக பாஞ்சாலன் மகள் திரௌபதி, நாகராசன் மகள் நாககன்னி, சித்தாயன் தங்கை சுபத்திரை, மேகராசன் மகள் மின்னொளி, அகஸ்தியன் பெண் போகவலி, சேராம்பூ ராசன் மகள் பவளக்கொடி என ஏழு மனைவிகள்.

Alliyum Archunanum

இதுபோல இன்னும்பல சுவையான கதைகளுக்கு அ.கா.பெருமாள் அவர்கள் அரிதின் முயன்று தொகுத்தளித்துள்ள “அர்ச்சுனனின் தமிழ்க் காதலிகள்” படியுங்கள். காலச்சுவடு வெளியிட்டுள்ளது.

த்ருஷ்ட்த்யும்னன் என்பதுபோல வாயில் நுழையாத பல்லுடைக்கும் பெயர்கள்தானே பாரதக் கதைகளில் பார்த்திருப்பீர்கள்! பல்வரிசை, பொன்னுருவி, பவளக்கொடி, பெருந்திருவாள், நீள்முகன், மின்னொளியாள் போன்ற கதைமாந்தர்களெல்லாம் மகாபாரதங்களில் உண்டு. படித்து மகிழுங்கள்.

புத்தகம் என்றாலே ஒதுங்கி ஓடுபவர்கள்கூட ஒரேமூச்சில் படித்துவிடலாம்.

விளம்பரம்போல இருந்தாலும் இப்படித்தான் இந்த நூலைப்பற்றி என்னால் எழுதமுடியும்.

பள்ளிகளில் உறையும் முனிகளும் மொழிகளும்

நமது சமூக வழக்கப்படி தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யாவை ஓரிரு ஆண்டுகளுக்கு முன்புவரை எனக்கும் தெரியாது. அ.முத்துக்கிருஷ்ணன் ஒருங்கிணைக்கும் ‘பசுமை நடை’யொன்றில் பாறைப்பள்ளியில் அவரிடம் பாடம் கேட்டேன்.

அறுபது ஆனபின்னும் இன்னும் இளைஞர். மலைக்காது மலை ஏறுகிறார். மலைகள் என்றால் மரங்களடர் சோலைகள் அல்ல. வழுக்கும் மொட்டைப்பாறைகள். அலுவலராக ஓய்வு பெற்றுவிட்டாலும் அறிஞராகத் தொடர்ந்து செயலாற்றுகிறார். ‘கல்’வர்களிடமிருந்து யானைமலையைக் காப்பாற்றியதில் அவருக்கும் பெரும்பங்கு உண்டு. ‘பாண்டிய நாட்டு வரலாற்றுப் பேரவை’ மூலமும் ‘பசுமை நடை’ மூலமும் அடுத்த தலைமுறைக்கு நமது அறிவுச்சொத்துகளை எடுத்துச்செல்கிறார்.

வலிக்காத கிண்டலும் வாய்திறக்காச் சிரிப்புமாய் இளைஞர்களை ‘ஓட்டுவதிலும்’ வல்லவர். உதாரணத்திற்கு ஒன்று. மூன்று தன்னார்வலர்கள் நிகழ்வொன்றில் கையைக் கட்டிக்கொண்டு தீவிர முகபாவத்துடன் நிற்கிறார்கள். இதை ஒருவர் நிழற்படம் எடுத்து முகநூல் பக்கத்தில் இடுகிறார். மற்றவர்கள் ‘வாவ்’ ‘நைஸ்’ ‘சூப்பர்’ என்று கருத்துரைக்கிறார்கள். இவர் தனக்கேயுரிய பாணியில் ‘இந்த மூணு பேருக்கும் 28ம் தேதி வாய்தா’ என்று கமெண்ட் போடுகிறார். (திரும்ப அந்த படத்தைப் பார்க்கையில் அவர்கள் காவலர்களிடம் அகப்பட்ட குற்றவாளிகள் போலவே இருந்தார்கள். 28ம் தேதிக்கும் முக்கியத்துவம் உண்டு. அன்று இன்னொரு நிகழ்வு இருந்தது).

இப்போது நாம் பேசவந்தது அவர் எழுதியுள்ள ‘மதுரையில் சமணம்’ நூல் குறித்து. மதுரை சமணப் பண்பாட்டு மன்றத்தின் சார்பில் ஜனவரி 2013ல் இந்நூல் முதலில் வெளிவந்தது. அதன் இரண்டாம் பதிப்பை இப்போது கருத்து=பட்டறை வெளியிட்டுள்ளது. வாசிக்க வசதியான நல்ல வடிவமைப்பு. ஓரிரு எழுத்துப்பிழைகளே உள்ளன. புராதன தோற்றமோ பொடிப்பொடியாகும் தாளோ இல்லை. வழுவழு தாளில் வண்ணப்படங்கள் பதினெட்டு இறுதியில் தரப்பட்டுள்ளன (கீழவளவு சமணர் படுக்கையில் ஆறுமுகமும் சந்திரலேகாவும் சிவப்புப் பெயிண்டில் படுத்திருக்கின்றனர்). இறுதியில் ஒருபடத்தில் மதுரையில் சமணச்சிற்பங்களும் படுக்கைகளும் உள்ள இடங்கள் கூகல் வரைபடத்தில் குறித்துக்காட்டப்பட்டுள்ளன.

மதுரையில் சமணம்

சாந்தலிங்கம் இதை சமணப் பண்பாட்டு மன்றத்தின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு வழிகாட்டி நூலாக ஆக்கியுள்ளதால் அடிக்குறிப்புகளோ, குறிப்புதவி நூல் பட்டியலோ இல்லை. பயங்கொள்ளற்க. மூன்று இயல்கள் உள்ளன. சமண சமயத்தின் தோற்றமும் தென்னகப் பரவலும் பற்றிய அறிமுகம் முதலில். மதுரையைச் சுற்றியுள்ள சமணச் சின்னங்களின் விளக்கமான வழிகாட்டுதல் அடுத்த இயலில். இயல் மூன்றில் இக்குகைகள் ஆசிவகத்தைச் சார்ந்தவையா என்ற விவாதத்தைப் பரிசீலித்து சமணச் சின்னங்களே என்று நிறுவுதல். பின்னிணைப்பாக பாண்டி நாட்டு (தென் தமிழகத்தின்) சமணத் தலங்களின் பட்டியலும், அயிரைமலை, உத்தமபாளையம், கோவிலாங்குளம், தொப்பலாக்கரையில் உள்ள சமணச்சின்னங்கள் பற்றிய விளக்கங்களும் இடம்பெற்றுள்ளன.

இதை சமணம் என்றொரு சமயம் சார்ந்த நூலாகக் கருதி எளிதில் புறந்தள்ளக்கூடாது. சமணத்தின் சாதிபாராட்டாமை, அகிம்சை, அன்ன தானம், அறிவு தானம், அடைக்கல தானம், ஔசத தானம் என்ற விழுமியங்களின் இன்றைய தேவை ஒருபுறம் இருந்தாலும் இச்சின்னங்கள் உள்ள இடங்களுக்கு வேறொரு இன்றியமையாப் பண்பு  உண்டு. அது தமிழி எழுத்துக்களைத் தன்னகத்தே கொண்டு நம் தொன்மைக்கு சான்று பகர்வதே அது. மேலும் இவ்விடங்களின் மிச்சங்கள் கனிமச்சுரண்டலின் கொடுங்கரங்களுக்கு இரையாகாமல் இருக்க இவைபற்றிய விழிப்புணர்வும் தொடர்ந்து இவ்விடங்களில் மக்கட் புழக்கமும் அவசியம். தமிழிக் கல்வெட்டுகள் பற்றிய விரிவான தகவல்களை இந்நூலில் தந்துள்ளார்.

எழுத்தில் இருந்தால்தான் எதையும் வரலாறு என்று ஏற்றுக்கொள்ளும் சிலர் இருக்கலாம். சில நாட்டார் வழக்காற்றியல்காரர்கள் முற்றாக தொல்லியலாளர்களைப் புறக்கணிக்கலாம். அரச வரலாறுகள் என்று கல்வெட்டுக்களைச் சிலர் புறக்கணிக்கலாம். தொல்லியலாளர் சிலர் இலக்கியப் பரிச்சயமே இல்லாதிருக்கலாம். சாந்தலிங்கம் இவை எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறவராகவே தெரிகிறார். பழந்தமிழ் இலக்கியங்களையும், சிற்றிலக்கியங்களையும் மேற்கோள்காட்டி இணைப்புக் கண்ணிகளால் வரலாற்றை நெய்ய அவருக்கு முடிகிறது. அறிவுலகின் சமகாலப் போக்குகளுக்கு முகம்கொடுக்கிறார். ஆசிவகமா என நடக்கும் விவாதத்தில் ஆக்கப்பூர்வமாகப் பங்கெடுத்து தனது முடிவுகளை உறுதிபட உரைக்கிறார். சமணர் கழுவேற்றத்துக்கான சமகாலத் தொல்லியல் ஆதாரங்கள் இல்லை என்பதைத் தெளிவுபடச் சொல்லுகிறார். பெண்மணிகள் சிற்பங்கள் செய்துவித்திருப்பதையும், மாணாக்கர் முன்னொட்டு (இனிஷியல்)போல தங்கள்  ஆசிரியர்கள் பெயர்களை பெருமையாகப் பொறித்திருப்பதையும் சுட்டுகிறார். நமது அண்டை மாநிலங்களில் வரலாறு எழுதுவோர் பிறமொழியில் (குறிப்பாக தமிழில்) ஒரு கல்வெட்டு தங்கள் பகுதியில் இருந்தால் கல்வெட்டுச் செய்தியை மட்டும் வசதிப்படி சொல்லி அதன் மொழியை மறைத்துவிடுவர். அய்யா அத்தகைய சாய்வுகளுக்கு உட்படாதவர். கன்னடக் கல்வெட்டோ வடசொல்லோ அதைத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

வடதமிழகத்திலும் ஜைன இளைஞர் மன்றத்தினர் அகிம்சை நடை செல்கின்றனர் என அறிகின்றேன். அவர்களுக்கும் வழிகாட்ட அய்யாவோ, அறிஞர் பிறரோ இன்னொரு நூல் எழுதட்டும்.

மதுரையில் சமணம் – முனைவர் சொ.சாந்தலிங்கம், விலை ரூ. 100/-

கருத்து = பட்டறை,

2, முதல் தளம், மிதேஸ் வளாகம், 4வது நிறுத்தம், திருநகர், மதுரை – 6. பேசி: 9842265884

ஒரு வளாகம், இரு தோழர்கள்; ஒரு சிறுநூல், சில நினைவுகள்

அது 2000-இல் என்று நினைக்கிறேன். திருப்பரங்குன்றம் காவல்நிலைய பேருந்து நிறுத்தம் அருகே தியாகராசர் பொறியியற் கல்லூரிக்குச் செல்லும் திருப்பத்தில் ஒரு பெரிய கட்-அவுட் வைத்து முந்தைய ஆண்டொன்றின் அதே நாளில் உயிர்த்தியாகம் செய்த தோழர்கள் செம்பு, சோமுவுக்கு நினைவஞ்சலி செலுத்தியிருந்தார்கள். அவர்கள் யார்? எதற்கு? எப்படி என்று எதுவும் தெரியவில்லை. கேட்டபோது அந்த நாட்களில் அது ஒரு ரவுடி காலேஜ் என்று மட்டும் சொன்னார்கள். நானும் அப்போது தினமலர்தான் உண்மையின் உரைகல் என்றும் துக்ளக்தான் நேர்மையான அரசியல் இதழ் என்றும் நம்பிக்கொண்டிருந்தவன். எனவே வேறு சில தருணங்களில் இந்தப்பெயர்களை வைத்து நண்பர்களைக் கிண்டல் செய்ததோடு சரி.

சென்ற ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் பாரதி புத்தகாலயம் போட்டிருந்த சிறுநூல் ஒன்றைப் பார்த்தேன். ‘ஒரு வளாகமும் சில தோழர்களும்’ என்பது தலைப்பு. ‘சோமு – செம்பு நினைவலைகள்’ என்று உபதலைப்பு. ப.கு.ராஜன் தொகுத்தது. விலை முப்பத்தைந்தே ரூபாய். தோழர்கள் சோமசுந்தரம், செம்புலிங்கம் பற்றித் தெரிந்துகொள்ள பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பின் ஒரு வாய்ப்பு.

தியாகராசர் பொறியியற் கல்லூரியில் 1967ல் சேர்ந்தவர் தொடங்கி 1988ல் முடித்த ஒருவர் வரை  இந்திய மாணவர் சங்க உறுப்பினர்களாக இருந்த சிலர் தங்களது நினைவுகளையும் அனுபவங்களையும் சுருக்கமாகப் பகிர்ந்துகொள்வதன்வழி நமக்கு ஒரு சித்திரம் கிடைக்கிறது. அது தி.பொ.கவில் இந்திய மாணவர் சங்க செயல்பாடுகளை மட்டுமின்றி அந்நாட்களில் கல்லூரியில் நிலவிய அரசியல் சூழலையும், சாதியச் சூழலையும், பகடிவதைத் தொந்தரவுகளையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

கல்லூரிக்குள் நிலவிய சாதியச்சூழலில் ஒரு கட்டத்தில்  இந்திய மாணவர் சங்கம் (SFI) தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான அமைப்பாக அறியப்படலாகிறது. அதன் தோழர்கள் ஆதிக்க சாதியினரால் தாக்குதலுக்குள்ளாகிறார்கள். இவர்கள் திருப்பி அடிப்பதே சரியென்று முடிவெடுக்கிறார்கள். இவ்வாறு தகராறு கனன்று வந்த நிலையில் 1981 மார்ச் 31ம் நாள் வெளியாட்களுடன் நள்ளிரவில் சாதியச் சக்திகள் புகுந்து நடத்திய தாக்குதலில் செம்புலிங்கம் கொல்லப்படுகிறார். கேள்விப்பட்டு விரைந்து வரும் சோமசுந்தரமும் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழக்கிறார். செம்பு ‘மாற்று சமூக’ப் பெண் ஒருவருடன் காதல் வயப்பட்டிருந்தார் என்ற குறிப்பு இருக்கிறது.

நாங்கள் படிக்கிற நாட்களில் வளாகத்தில் அரசியல் வாடையே அற்றுப்போயிருந்தது என்றுதான் சொல்லவேண்டும். தன்னாட்சி அந்தஸ்து பெற்ற நிர்வாகம். பெண்பிள்ளைகளுடன் பேசினால் ஏதாவதொரு ஆய்வகத்தேர்வில் தோல்வியடையச் செய்துவிடும் கலாச்சாரக் காவலர்களான சில பேராசிரியர்கள். வளாக நேர்முகத் தேர்வு மூலமாக மென்பொருள் நிறுவனத்தில் நுழைந்துவிடுவதொன்றையே வாழ்க்கை இலட்சியமாகக் கொண்ட மாணவர்கள். இளநிலை பயன்பாட்டு அறிவியல் மாணவர்கள் மட்டும் தருமபுரி பேருந்து எரிப்புச் சம்பவத்தின்போது சுவரொட்டி ஒட்டித் தண்டனைக்குள்ளானார்கள்.

இந்நூலில் கருத்துரைத்துள்ள கே.புனிதவேல், இன்றைக்கு மாணவர்கள், குறிப்பாக பொறியியல் கல்லூரி மாணவர்கள் தங்கள் சொந்த பிரச்சினைகளுக்கும்கூட போராட வருவதில்லை. அரசியலற்ற போக்கு கவலை தருவதாக உள்ளது. ஏனென்றால் கல்லூரிப் பருவத்தில் ஏற்படும் அரசியல் ஈடுபாடு, செயல்பாடு, தலைமைப் பண்புகள் பின்னர் சொந்த வாழ்க்கையிலும் பெரிதும் பயனளிப்பதாக உள்ளது என்பது எங்கள் பலரது அனுபவமாக இருக்கின்றது என்கிறார்.

இந்நூலில் ஒரு கவிதை உள்ளது. முதலாமாண்டு நினைவுநாளில் முத்துக்குமரன் பாடியது. பங்குனி இரவொன்றில் உதிர்ந்த இரு நட்சத்திரங்களை அலகில் சுமந்துகொண்டு இருள் ஜனசமுத்திர நடுவே பறக்கும் இளம்பறவைகளின் பிரகடனம் பற்றிய கவிதை. அதில் திருப்பரங்குன்ற மலை உட்கார்ந்தவாக்கில் பீடி குடித்துக்கொண்டே தூங்கும் இரவுக்காவலாளி போலத் தோற்றமளிக்கிறது.

மொழிபெயர்ப்பின் தொடுஎல்லை

கடந்த ஜூன் 14,15ல் திண்டுக்கல் நொச்சியோடைப்பட்டியில் எஸ்.ரா-வும் டிஸ்கவரி புக்பேலஸும் இணைந்து கதைகள் பேசுவோம் (2): நாவல் இலக்கிய முகாம் நடத்தியதை நீங்கள் அறிந்திருக்கலாம். அதில் மொழிபெயர்ப்பாளர் சா.தேவதாஸ் மொழிபெயர்ப்பின் சிக்கல்கள் பற்றிய ரோமானியக் கவிதை ஒன்றிருப்பதாகக் குறிப்பிட்டு அதன் சாரத்தைச் சொன்னார்.

கொஞ்சம் தேடியதில் அது மரீன் சொரெஸ்கு எழுதிய ஒரு கவிதை என்றறிந்ததோடு அதன் இரு ஆங்கில வடிவங்களும் கிடைக்கப்பெற்றேன். எனது தமிழ், ஆங்கிலம், கவிநுகர்திறன் ஆகியவற்றின் போதாமைகளை நன்கு உணர்ந்திருந்தபோதும் அதைத் தமிழில் எழுதிப்பார்க்கத் தயங்கவில்லை.  கவிதையே மொழிபெயர்ப்பின் போதாமைகள் பற்றியது என்றுதானே சொன்னார்கள்! அந்தக் கவிதை இங்கே:

 மொழிபெயர்ப்பு

நான் தேர்வெழுதிக்கொண்டிருந்தேன்

வழக்கொழிந்த மொழியொன்றில்

என்னையே மொழிபெயர்க்கவேண்டியிருந்தது

ஒரு மனிதனிலிருந்து மந்தியாக

 

நான் சுற்றிவளைத்துத் தொடங்கினேன்

காட்டிலிருந்து ஒரு பனுவலை

முதலில் மொழிபெயர்த்து

 

என்றாலும், என்னையே நான் நெருங்கநெருங்க

மொழிபெயர்த்தல் மென்மேலும் கடினமாகியது

கொஞ்சம் முயற்சியெடுத்து

சரிமாற்றுச்சொற்களைக் கண்டுபிடித்தேன்

கால்விரல் நகங்களுக்கும்

பாத ரோமங்களுக்கும்

 

முழங்காலுக்கு வரும்போது

திக்கித்திணற ஆரம்பித்தேன்

இதயத்தில், எனது கை நடுங்கியது

கதிரவனில் கறைசெய்துவிட்டேன்

 

சரிசெய்ய முயற்சித்தேன்

நெஞ்சக முடி கொண்டு

கடைசியில் தோற்றுப்போனேன்

ஆன்மாவை அடைந்தபோது

– மரீன் சொரெஸ்கு

அறிக! நீ ஒரு ___________.

உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் என்கிறார்கள். தன்னைத் தானும் அறிந்துகொண்டு ஊருக்கும் சொல்லிவிட்டால் தலைவன் ஆகிவிடலாம் என்கிறார்கள். தெய்வம் நீயென்றுணர் என்று ஒரு ஆள் பட்டையைக் கட்டி ஏத்திவிடுகிறார். இன்னும் ‘நான் யாரு எனக்கேதும் தெரியலியே’ என்று புலம்பக்கூடிய ஆளாகவே இருக்கிறேன். ‘உன்னை நான் அறிவேன்; என்னை அன்றி யாரறிவார்’ என்று உரிமை கொண்டாடத்தக்க ஆட்கள் இல்லாத நிலையில் அடிக்கடி எனது ஆளுமைக்கூறுகளை அறிந்துகொள்ள ஏதாவது பரிசோதனைகள் இலவசமாகக் கிடைக்கிறதா எனப் பார்ப்பது வழக்கம். (உண்மையான நோக்கம் மனநிலை இன்னும் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறதா என்று பார்ப்பது). அப்படித் தேடும்போது சிக்கியதுதான் ஆளுமையின் ஐம்பெருங்களங்களைச் சோதித்தறிகிற இந்த ஐபிஐபி-என்ஈஓ 5- காரணி தேர்வு. 

300 கூற்றுக்கள் அடங்கிய நீண்ட வடிவமும் இருக்கிறது. 120 கூற்றுக்களே உள்ள சுருக்கிய வடிவமும் இருக்கிறது. உங்களுக்கு இருக்கும் நேரத்தைப் பொறுத்து ஏதாவதொன்றைத் தெரிவு செய்யலாம். அதிகபட்சம் முக்கால் மணிநேரம் ஆகும். கூற்றுக்கள் இப்படி இருக்கும்: “தேசியகீதம் இசைக்கப்படும்போது எழுந்து நிற்பது எனக்கு விருப்பமானது”. இந்தக் கூற்று ‘மிகவும் துல்லியமற்றது’, ‘ஓரளவு துல்லியமற்றது’, ‘துல்லியமென்றொ, அல்லவென்றோ சொல்லவியலாது’, ‘ஓரளவு துல்லியமானது’, ‘மிகவும் துல்லியமானது’ என்று உங்கள் தெரிவைச் சொடுக்கவேண்டும். சோதனையின் முடிவில் 5 பெரும் ஆளுமைப் பரிமாணங்களில், அவற்றின் 30 துணைக்கூறுபாடுகளில் நீங்கள் மற்றவர்களோடு ஒப்பிடுகையில் எப்படிப்பட்டவர் என்பது பற்றிய அறிக்கை கிடைக்கும்.

இதை உளநோய் இருக்கிறதா என்று கண்டறிகிற சோதனையாக எல்லாம் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று தெளிவாக துவக்கத்திலேயே சொல்லப்பட்டுள்ளது. கவனிக்கவேண்டும், இதில் சொல்லப்படுவதெல்லாம் உங்கள் பாலினம், வயது உள்ளவர்களோடு ஒப்பிட்டால், ஒரு குறிப்பிட்ட பண்பு உங்களிடம் ஒப்பீட்டளவில் குறைவாக/ சராசரியாக/ அதிகமாக இருக்கிறதா என்பதுதான். எந்த ஒரு பண்பும் குறைவாக அல்லது அதிகமாக இருப்பதுதான் சரி என்று அறுதியிட்டெல்லாம் கூறிவிடமுடியாதாம். பல செயல்களுக்கு அந்த ஒரு குறிப்பிட்ட ஆளுமைக்கூறு தொடர்பேயற்றதாக இருக்கலாம். சில செயல்களுக்கு அதிகம் தேவைப்படலாம். சிலவற்றுக்குக் குறைவாக.

அந்த ஐம்பெருங்களங்களும், அவற்றின் 30 துணைக்களங்களுந்தான் என்னென்ன:

1)   புறநோக்குத்தன்மை (Extraversion):

                     i.        எளிதில் நட்புகொள்ளும் தன்மை (Friendliness)

                    ii.        கூட்டம்நாடும் தன்மை (Gregariousness)

                  iii.        உறுதிபட நிற்கும் தன்மை (Assertiveness)

                   iv.        செயல்பாட்டு அளவு (Activity level)

                    v.        மனவெழுச்சி நாடும் தன்மை (Excitement seeking)

                   vi.        மகிழ்வுபொங்கும் தன்மை (Cheerfulness)

2)   ஏற்றுக்கொள்ளத்தக்கவராகத் திகழ்தல் (Agreeableness):

                     i.        நம்பகம் (Trust)

                    ii.        நன்னெறி (Morality)

                  iii.        பொதுநல நோக்கு (Altruism)

                   iv.        ஒத்துழைத்தல் (Cooperation)

                    v.        தன்னடக்கம் (Modesty)

                   vi.        இரக்கம் (Sympathy)

3)   நெஞ்சங்கோடாமை / விவேகம் (Conscientiousness / Prudence):

                     i.        செயல்முடிக்குந்திறன் (Self – efficacy)

                    ii.        ஒழுங்குமுறை நாடுதல் (Orderliness)

                  iii.        கடமையுணர்ச்சி (Dutifulness)

                   iv.        சாதிக்கும் முனைப்பு (Achievement – striving)

                    v.        சுய கட்டுப்பாடு (Self – discipline)

                   vi.        எச்சரிக்கையுணர்வு(Cautiousness)

4)   எதிர்மறை உளப்பாங்கு (Neuroticism):

                     i.        பதற்றம் (Anxiety)

                    ii.        சினம் (Anger)

                  iii.        உளச்சோர்வு (Depression)

                   iv.        தன்னுணர்வு (Self-consciousness)

                    v.        மட்டுப்படுத்த இயலாமை (Immoderation)

                   vi.        பாதிப்புக்குள்ளாகும் தன்மை (Vulnerability)

5)   திறந்தமனத்தோடு அனுபவம்நாடல் (Openness to Experience):

                     i.        கற்பனை வளம் (Imagination)

                    ii.        கலையார்வம் (Artistic interests)

                  iii.        உணர்ச்சிவயப்படல் (Emotionality)

                   iv.        சாகசம் நாடல் (Adventurousness)

                    v.        மதிநுட்பம் (Intellect)

                   vi.        தாராளவாதம் (Liberalism)

துறைசார்ந்த பயிற்சி உடையவன் அல்லேன் என்பதால் கூறுபாடு, பரிமாணம், களம், நாடல், தன்மை என்றெல்லாம் குண்டக்க மண்டக்க வார்த்தைகளை இறைத்திருக்கிறேன். சற்று எச்சரிக்கையோடு அணுகவும்.

எல்லாம் நமக்கு ஏற்கனவே தெரிந்ததுதான் என்று தோன்றுவதிலிருந்தே இந்த சோதனையின் நம்பகத்தன்மை உறுதியாகிறது. சில தெளிவான சொற்களில், சுருக்கமான விளக்கங்களோடு என்னைப் பற்றிய அறிதலை விரிவாக்கியிருக்கிறது. இப்போது நான் கவனம் செலுத்தவேண்டிய சில கூறுகள் எவ்வெவை என்று சற்று துலக்கமாகிறது.

ஜான் ஏ. ஜான்சனுக்கு நன்றி.

வேலூர் சீனிவாசனார்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ‘சத்யமேவ ஜெயதே (அமீர்கான்)’ புகழ் வேலூர் சீனிவாசன் பேசுகிறார் என்றார்கள். எல்லாத் துறையிலும் கால்பரப்பி நிற்கும் ஒரு பெருநிறுவனம் ஏற்பாடு செய்த விழா என்பதால் கொஞ்சம் சந்தேகத்தோடுதான் போனேன். உள்ளே நுழைந்தபோது யுனிசெஃப் ஆவணப்படுத்திய இந்த குறும்படத்தைக்  காட்டி வேலூரில் எப்படி ‘வீண்பொருள் இல்லா மேலாண்மை’யை வெற்றிகரமாக செயல்படுத்தினார்கள் என்பதை விளக்கிக்கொண்டிருந்தார். பிறகு பவர்பாயிண்ட் காட்சியின் துணைகொண்டு பலவற்றை ஆங்கிலத்தில் விளக்கினார். விஷயமும், வேகமும் இருக்கிற ஒரு உற்சாகம் கொப்பளிக்கும் பேச்சுக்கு இலக்கண சுத்தமெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்பது புரிந்தது.

முழுக்க முழுக்க செயல்பாட்டின்புறத்துப் பிறந்த பட்டறிவு கொண்டு பேசினாலும் அளவைகளும், புள்ளிவிவரங்களுமாய் அறிவியல்ரீதியான விளக்கங்கள் தந்தார். மட்குவது எது மட்காதது எது என்று பட்டியல். ஒவ்வொன்றும் எத்தனை விழுக்காடு என்றொரு பகுப்பாய்வு. எது எவ்வளவு நேரத்தில் சிதையத் தொடங்கும் என்று ஒரு கணக்கு. எந்த ஒரு கட்டுமானமும் எவ்வளவு நீள, அகல, உயரம் இருக்கவேண்டும் என்று ஒரு விளக்கம்.

மேலே குறிப்பிட்டிருந்த ஆவணப்படத்துக்கு ‘Garbage to Gold’ என்று எப்படிப் பெயர் வைத்தார்கள் என்பதை சுவைபட விளக்கினார். பல பெயர்களைப் பரிசீலித்துக் கொண்டிருந்தார்களாம். அப்போது அவ்வழியாக இவர்கள் அமைப்பில் பணிபுரியும் ஒரு பெண் கடந்துசென்றிருக்கிறார். அவரது காதுமடலெல்லாம் தங்கம். ஏனென்று கேட்டிருக்கிறார்கள். என் காது ஒரு பாதுகாப்புப் பெட்டகம் மாதிரி. என் கணவர் குடிகாரர் என்பதால் குப்பைசேகரித்து சிறுகச் சிறுக சம்பாதித்த பணத்தை நகையாக்கிக் காதில் மாட்டிவிட்டால் பத்திரமாக இருக்கும். தேவைப்படும்போது அடகு வைத்துக்கொள்வேன். பணம் இருக்கும்போது மீட்டுக்கொள்வேன். வேறெங்காவது வைத்தால் அவர் எடுத்துவிடுவார் என்றாராம். அதிலிருந்தே அப்படியொரு தலைப்பு இவர்களுக்குத் தோன்றியிருக்கிறது. 250 குடும்பங்களுள்ள ஒரு பகுதியில் இந்த திட்டத்தை செயல்படுத்தும்போது வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள இதுமாதிரி நான்கு குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெறும்.

கண்ணைக் கூட இறந்த ஆறுமணி நேரத்துக்குள் எடுத்தால் அடுத்த ஆளுக்குப் பயன்படுத்தமுடியும். அதுபோலத்தான் நமக்கு பயன்பாடு இல்லையென்பதாலேயே ஒரு பொருள் வீணானதாகிவிடாது. அது மக்க / அழுகத் தொடங்க நேரமாகும். அதற்குள் அதை சேகரித்துவிட்டால் வேறெதற்காவது பயன்படும். எடுத்துக்காட்டாக காய்கனிக்கழிவு கால்நடைத் தீவனமாகவும், உறித்த எலுமிச்சை / ஆரஞ்சுத் தோல் சிகைக்காயுடன் சேர்த்து அரைத்தால் பாத்திரம் விளக்கவும் பயன்படும். நாற்றமும் இருக்காது என்பதால் அகற்றுவது இழிவான வேலையாகவும் இருக்காது. எனவே வீட்டிலேயே குப்பைக்கூடை நிரம்பும்வரை வைத்திருந்து பிறகு தொட்டியில் விட்டெறிந்து அதை அவர்கள் இரண்டு நாள் கழித்து எடுத்து எங்காவது கொண்டுபோய் கொட்டுவதற்குப் பதில் உடனுக்குடன் சேகரித்தால் குப்பையில் கொட்டிக்கிடக்கும் செல்வத்தை பயனுள்ள வகையில் நாம் அடையலாம் என்பதை விளக்கினார்.

அம்பு தைக்கிற மாதிரி கருத்து சொல்கிறார். விளக்கேற்றிய பிறகு குப்பை சேகரிப்பது சவாலாக உள்ளது. வீட்டிலுள்ள லெட்சுமி வெளியேறிவிடுவாள் என்று குப்பையைப் போட மறுக்கிறார்கள். ஆனால் பகலில் அதே குப்பையை லெட்சுமி என்றுணராமல் தொட்டியைச் சுற்றி எறிகிறார்கள் என்றார். சொல்லும்போதே திரையில் ஒரு நிழற்படம் காண்பித்தார். அதில் குப்பையில் லெட்சுமி படம் போட்ட நாட்காட்டி அட்டை கிடக்கிறது. பிரிக்கப்படாத குப்பை கொட்டப்பட்டிருப்பதைக் காட்டி திருப்பதி உண்டியலைத் திறக்கும்போதுகூட இப்படித்தான் பலவகை ரூபாய் நோட்டுகள், நாணயங்கள், நகைகள், தாலிச்சரடு, கிரீடம் என்று கிடக்கும். பிரித்து அடுக்கினால் அத்தனையும் பணம் என்று சொல்லிவிட்டு அதுபோல பிரிக்கப்பட்ட குப்பைகள் உள்ள படத்தை அடுத்துக்காட்டுகிறார்.

மட்குபவை உரமாகின்றன. மட்காதவை மறுசுழற்சிக்குப் போகின்றன. எந்த ஒரு பொருளும் வீணாவதில்லை. அவருக்காக மண்புழுக்களும், மாடுகளும், வாத்துகளும் வேலைபார்க்கின்றன. வானுக்குக் காக்கை, நிலத்துக்குப் பன்றி என்றால் நீரைத் துப்புரவு செய்ய வாத்துக்கள். மீன் சந்தைக் கழிவுகள் அவற்றுக்கு உணவு. காய்கறிச் சந்தையில் எஞ்சியவை உடனுக்குடன் எடுத்துவரப்பட்டு கொட்டப்படுகின்றன. காத்திருந்த மாடுகள் ‘காலை முகூர்த்தத்தில் கல்யாணம் முடிய பந்திக்குப் பாயும்  உறவினர்கள்’போல விரைகின்றன. ஓரிரு மணிக்குள் ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிடுகின்றன. பிறகு பாலும், சாணமும், கோமியமும் தருகின்றன. இவற்றிலிருந்து பலவகைப் பொருட்கள் கிடைக்கின்றன. சுழற்சி உறுதிசெய்யப்படுவதால் அப்புறப்படுத்தல் என்பது இல்லை.

காட்டுக்குள் கால்நடைகள் இறந்து அழுகிக் கிடக்கின்றன. அவற்றின் வயிற்றைப் புரட்டிப் பார்த்தால் உள்ளே அடுக்கடுக்காக பாலித்தீன் பைகள். வாசம் பார்த்து உண்ணும் அவை காய் வைத்திருந்த பையிலும் அதே வாடை அடிப்பதால் தின்றுவிட்டு மடிகின்றன. பிளாஸ்டிக் ஆர்க்டிக் வரை பரவியிருக்கிறது. ஆச்சி வைத்திருந்த சுருக்குப்பை போல அல்லது பெரிய பூசாரி திருநீறு மடித்துவைத்திருந்த பைபோல ஒரு சிறிய பை ஒன்றைக் காண்பித்தார். அதில் உள்ள கொக்கியைப் பயன்படுத்தி கால்சட்டையில் அடையாள அட்டையைத் தொங்கவிடுவதுபோல மாட்டிக்கொள்ளலாம். தேவைப்படும்போது உள்ளே இருப்பதை இழுத்துவிரித்தால் பெரிய துணிப்பை ஒன்று கிடைக்கிறது. பயன்படுத்திவிட்டு மடித்துச் சுருக்கிவைத்துவிடலாம். இதன்மூலம் வாழ்நாளில் ஒருவர் 22,000 பாலித்தீன் பைகளைத் தவிர்க்கமுடியும். திசுத் தாள் கலாச்சாரத்தில் மூழ்காமல் கைக்குட்டைப் பண்பாட்டைக் கடைப்பிடியுங்கள் என்றார். அவர் கால்சட்டைப்பையில் இரு புறமும் கைக்குட்டைகள் இருந்தன. உணவருந்திவிட்டு கையையும், வாயையும் துடைக்க வலதுபுறம் ஒன்று. மூக்கு சிந்திவிட்டுத் துடைக்க, மூடிக்கொண்டு தும்ம என்று இடதுபுறம் ஒன்று.

அமெரிக்காவில் குப்பை அகற்றுகிறேன் என்ற பெயரில் நகருக்கு வெளியே 350 – 500 கிமீ தொலைவில் கொண்டுபோய் 45 ஹெக்டேர் பரப்புள்ள ‘அறிவியல்பூர்வமான’ கிடங்கில் கொட்டுகிறார்கள். இதுமாதிரி நிலத்துக்குக் கீழே 80 அடியும், மேலே 100 அடியுமாக நிரம்பிக்கிடக்கும் 1800 குப்பை மலைகள் இருக்கின்றனவாம். அதைப் போய் பார்த்துவந்து நம்மாட்கள் காப்பி அடிக்கிறார்கள். நியூயார்க் குப்பை கொட்டப்படும் இடத்துக்குமேலும் நம்மூர் போலவே பறவைகள் வட்டமிடுகின்றன. ஒரே வித்தியாசம் நம்மூரில் 5 ட்ரக்குகளில் எடுத்துச்செல்லப்படும் குப்பையை அவர்கள் ஒரே கண்டெய்னரில் எடுத்துச்செல்கிறார்கள். இல்லாவிட்டால் நடுக்கடலில் கொண்டுபோய் கொட்டுகிறார்கள். அவ்வளவுதான் என்றார். இவர்கள் பயன்படுத்தும் முறைகள் மரபார்ந்தவை, உள்ளூர் தொழில்நுட்பம் கொண்டவை.

கோவை சூலூரில் மாடித்தோட்டம் போடப்பட்டுள்ளதைக் காண்பித்தார். 69 வகையான கீரைகளில் 43 ஐ மாடியிலேயே வளர்க்கமுடியும். 110 வகைப்பட்ட காய்கறிகளில் 75 – 80 வகைகள் வரை மாடித்தோட்டத்திலேயே உற்பத்தி செய்ய முடியும். வீடும் குளிர்சாதனம் பொருத்தாமலேயே குளிர்ச்சியாக இருக்கும்.

நிகழ்ச்சி நடந்தது கட்டுமானத் துறை சார்ந்த இடத்தில். எனவே இறுதியாக நாம் செங்கல், சிமெண்ட், எஃகு கொண்டு என்னதான் கட்டினாலும் அதிகபட்சம் சிலநூறு வருடங்கள் இருக்கும். இயற்கையான நீடிக்கத்தக்க உயிருள்ள கட்டிடக்கலையான மேகாலயாவின் இந்த உயிர்த்திருக்கும் பாலங்களை இதுவரை பார்த்திராதவர்கள் பாருங்கள் என்று இந்தப் படத்தைக் காண்பித்து உரையை நிறைவு செய்தார்.

கரையாத கரகமும் உயிர்பெற்ற சிரசும்

ஒரு காலத்தில் கோபக்கார முனிவன் ஒருவன் காட்டில் தனது மனைவி, ஐந்து பிள்ளைகளுடன் வசித்துவந்தான். வயது ஏறியதே தவிர மனைவியை முழுமையாக நம்பினானில்லை. அவளது நன்னடத்தையை உறுதிசெய்து கொள்ள ஒரு வழி கண்டுபிடித்து வைத்திருந்தான். அவள் தினமும் ஆற்றிற்கு தண்ணீர் எடுக்க வெறுங்கையோடு செல்லவேண்டும். கரையில் இருக்கும் பச்சை மண் எடுத்துக் குடம் செய்து அதில் தண்ணீர் மொண்டு வரவேண்டும். அவள் கற்புநெறி தவறாமல் இருந்தால் குடம் கரையாமல் நிற்கும். அப்படித்தான் ரொம்ப நாளாய் நின்றது.

சோதனையாக ஒரு நாள் அவள் தண்ணீர் கோர குனியும்போது அப்போது பார்த்து வானில் பறந்துசென்ற அழகர்கள் நீரில் தெரிய இமைப்பொழுது அசந்துவிட்டாள். அதுதான் சாக்கு என்று குடம் கரைந்துவிட்டது. பயந்துபோன கிழவி கிழவனுக்குப் பயந்து காட்டிலேயே பொழுதுபோக்கினாள். அவள் திரும்பிவரக் காணாத முனிவன் தனது தவவலிமையை இந்த தலைபோகிற காரியத்துக்குப் பயன்படுத்தி என்ன நடந்தது என்று கண்டுபிடித்துவிட்டான். மூத்த பிள்ளைகளை ஒவ்வொன்றாக அழைத்து தாயைத் தேடி தலையைக் கொய்யச் சொல்ல அவர்கள் ஒவ்வொருவரும் மறுத்து கல்லாய்ச் சபிக்கப்பட்டார்கள். அப்பனுக்குத் தப்பாமல் பிறந்த கடைசிப்பிள்ளை கல்லாகப் பயந்தோ என்னவோ தாயைக் கொல்ல கோடரி கொண்டு ஓடியது.

அங்கு அவளோ ஆவாரங்குலை சேகரிக்க வந்த நம்மன்னை பின் சென்று ஒளிந்தாள். அடைக்கலம் நாடி வந்தவருக்கு அபயம் அளிக்கும் நம்மன்னை என்னைக் கொன்றுவிட்டுப் பின் உன் அன்னையைக் கொள் என்றார். அந்த மூடனும் இருவரையும் வெட்டிச் சாய்த்ததோடு நில்லாமல் அப்பன் நம்பமாட்டானே என்று தாயின் தலையைக் கையோடு எடுத்துச் சென்றான்.

சொன்னதைச் செய்துவிட்டானே சொட்டைவால் குட்டி என்று மகிழ்ந்த அப்பன்காரன் இரண்டு வரம் தருவேன், என்ன வேண்டும் கேள் என்றான். தான் ஆடாவிட்டாலும் தன் சதையாட முதல் வரமாக அண்ணன்களை உயிர்ப்பிக்கவேண்டும் என்றான். அவ்வாறே செய்தான். இரண்டாவது வரமாக தனது அம்மையை உயிர்ப்பிக்க வேண்டும் என்றான். தலையைக் கொண்டுபோய் உடலோடு ஒட்டு, உயிர்த்துக்கொள்ளும் என்றான். இவனும் தலையைத் தூக்கிகொண்டு தலைதெறிக்க ஓடினான். எவளென்று தெரியாவிட்டாலும் அவளைக் காப்பாற்ற உயிர்விட்டாரே நம்மன்னை. அவரைப்பற்றி அப்போதும் நினைத்தானில்லை. ஆனால் இயற்கை நினைத்தது.  அவசரத்தில் நம்மன்னை உடலில் அவன் அன்னை தலையைவைத்து உயிர்ப்பித்துவிட்டான்.

அறியாத ஒருத்திக்காக முதலில் சிரசு தந்தார், பிறகு உடலும் தந்தார்  நம்மன்னை. அது அந்த யுகத்தின் தர்மம்.