கால்தூசு பெறாத ஒரு புள்ளிவிவரம்

சென்னையில் மகப்பேறியல் மருத்துவர் ஒருவரின் மனையில் காத்திருக்க வேண்டியிருந்தது. அப்போது பொழுதுபோகாமல், கழற்றிவிடப்பட்டிருந்த காலணிகள் பற்றி எடுத்த ஒரு கணக்கெடுப்பு: (எண்கள் சோடிகளில்)

  • பெண்கள் அணிகிற வகையிலான செருப்புகள் – 26; ஆண்களுக்குரியவை – 10 (அதில் ஒன்று மட்டும் ஷூ வகை); சிறுவர்களுடையது – 1; பிரித்தறிய இயலாதவை – 2
  • மிகவும் பிய்ந்து நைந்து கிடந்தவை – 3; குதிகாலின் வலது ஓரம் தேய்ந்தது – 1; குதிகாலின் இடது ஓரம் தேய்ந்தது -1
  • குதிகால் உயரமான செருப்பு ஒன்றே ஒன்று
  • அருகருகே இணையாகக் கழற்றி விடப்பட்டவை – 7; ஒரே சோடியில் ஒன்றன்மேல் ஒன்றாக – 1; வேறு சோடிச் செருப்பொன்றின்மீது – 3; ஒரு அடிக்கும் மேலான இடைவெளியில் -1
  • வலதுகால் செருப்பு சற்று முன்பாக – 2; இடதுகால் சற்று முன்பாக – 3; விரல் பகுதி ஒட்டியும் குதிப்பகுதி விரிந்தும் – 4; குதிப்பகுதி ஒட்டியும் விரல் பகுதி பிரிந்தும் – 3
  • சுரைவிதை வடிவில் இச்செருப்புகள் சிதறிப்பரவியிருந்த இடத்தின் பரப்பு தோராயமாக 20 சதுர அடி
  • ஒரே ஒரு சோடிச் செருப்பு மட்டும் ஏதோ நான்கைந்து நாட்களுக்கு முன்பு கழற்றிவிடப்பட்டுத் திரும்ப அணிந்துசெல்லப்படாததுபோல் புழுதிபாரித்துக் கிடந்தது.

இருட்டடிப்பு செய்தல் (அல்லது) வெளிச்சம் பாய்ச்சுதல்

‘ஜேக்கே’ என்று சுருக்கமாகவும், அப்பா பெயரையும் சேர்த்து ‘ஜெகதீசன் கார்த்திகேயன்’ என்று நீளமாகவும் அழைக்கப்படும் கார்த்திக் அப்போது முக்கியமான முடிவொன்றை எடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தான். கிளம்புமுன் இங்கேயே இரண்டுக்குப் போய்விட்டுப் போகலாமா அல்லது வீட்டுக்குப்போய் பார்த்துக்கொள்ளலாமா என்பது பற்றித்தான் முடிவெடுக்க வேண்டியிருந்தது.

வீச்சமெடுக்கும் காலுறையைக் கழற்றுவது, ஈரக்காலுடன் மறுபடியும் அணிவது அல்லது நடுவழியில் பேருந்தில் பதற்றம் நடுக்க வியர்த்திருப்பது எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்த்துக்கொண்டிருந்தான். “சரி, முதலில் சிறுநீர் கழித்துவிட்டு வந்துவிடலாம்” என்று ‘ஓய்வறை’ என்று எழுதப்பட்டிருந்த கழிப்பறைக்குள் நுழைந்தான். வீட்டுக்குப் போகுமுன் முகம்கழுவி, தலைமுடி, மீசையெல்லாம் சீவிமுடித்துச் சிங்காரித்துக் கிளம்புகிற தமிழ் ஆளான ராதாகிருஷ்ணன் உள்ளே வந்தார். அவருக்கு அது ஒப்பனை அறை.

வந்தவர் சும்மாயில்லாமல், பேசி ஓரிரு நாட்களாகிவிட்ட அக்கறையில் “என்னப்பா, எப்படிப் போயிக்கிட்ருக்கு?” என்றார். மூத்தவர்தான் என்றாலும் கொஞ்சம் இயல்பாக அவரிடம் பேசலாம். “தண்ணி வேற நெறையாக் குடிச்சனா, நல்லா பன்னீர் மாதிரி வெள்ளையாப் போகுது சார்” என்றான். மென்னகை அணிந்து தன்னை மேலும் அழகாக்கிக்கொண்டார்.

திரும்பிவந்து பார்த்தால் மும்பையிலுள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து சுடச்சுட அப்போதுதான் ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. நாளை காலை நடுவண் அமைச்சரை சந்திக்க நிறுவனத்தின் செயல் தலைவருக்கு அனுமதி கிடைத்திருக்கிறது. பேசவேண்டிய விஷயங்கள் பற்றி ஒவ்வொரு அலகும் இரவுக்குள் குறிப்பு அனுப்பவேண்டும். “இவன்ய்ங்களுக்கு இதெல்லாம் ஆறரை மணிக்குத்தான் தெரியும்” என்று திட்டும்போதே மேலதிகாரி அலைபேசியுடன் இவனது அமர்விடத் தடுப்புக்கு ஓடிவந்தார்.

“நல்ல வேளை, கெளம்பிட்டேன்னு நெனைச்சேன். நல்லதா நாலு பாய்ண்ட் போட்டு சீக்கிரம் கொடுப்பா. நான் ஒரு தடவை பார்த்ததும் அனுப்பிச்சிரலாம்” என்று நயந்தார். நாமாக அப்படி எதையும் செய்துவிடமுடியாது. நாளை இதை ஏன் போடவில்லை, அதை ஏன் போடவில்லை என்று துணை அலகுகளிலிருந்து போட்டுக்கொடுப்பார்கள். அவர்களுக்கு அதே அஞ்சலை முன்னனுப்பி, நியதிப்படி அலைபேசியிலும் அழைத்து ஏழரை மணிக்குள் அனுப்பிவிடும்படி வேண்டுகோள் விடுத்தான். ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு மொழி பேசுபவன். அவனவனது பண்பாட்டுச் சூழலுக்கிணங்க அவனவன் வண்ணமயமான வசவுகளை உதிர்த்திருப்பான்கள். அப்படியும் சொல்லமுடியாது. இந்தக்கால இளைஞர்களுக்கு “சாலா, ச்சூத்தியா”வை விட்டால் என்ன தெரிகிறது?

எப்படியும் பத்துமணி ஆகிவிடும். மேலதிகாரி தமிழ் ஆள்தான். எவ்வளவு நேரம் ஆனாலும் வீட்டில்போய் தயிர் சாதம் சாப்பிடுகிறவர். நாம் அப்படியிருக்க முடியாது.  ஒப்பந்தப்புள்ளி தயாரிக்கும் குழு தினமும் ஒன்பது மணி வரையாவது உட்கார்ந்து இருக்கும். ஏனெனில் அவர்களது தலைவர் உட்கார்ந்திருப்பார். ஏனெனில் அவரது குடும்பம் மும்பையில் இருக்கிறது. அந்தக் குழுவிடம் சொல்லிவிட்டால் நமக்கும் சேர்த்து பீஸ்ஸாவும், பழச்சாறும் தருவிப்பார்கள்.

பத்துமணிக்கு மேல் நேருப்ளேசிலிருந்து பத்து கிலோமீட்டர் தூரமேயுள்ள முனிர்க்காவுக்குப் போவது ஒரு பெருநாட்டின் தலைநகரத்தில் சிரமமாக இருக்கக்கூடாதுதான். ஆனால் பொதுப்போக்குவரத்தை நம்பி இருப்பவனுக்கு, குறிப்பாக அந்த தனியார் நகரப்பேருந்துகளை நம்பி இருப்பவனுக்கு பொருட்படுத்தத்தக்க சிரமந்தான்.

கார் வாங்கச்சொல்லி வீட்டில் ஒரே தொந்தரவு. “உங்களுக்குப் பரவாயில்லை. எங்க பிள்ளைகளையும் ஏன் சிரமப்படுத்திறீங்க?” என்று மாமனாரின் நண்பர் கேட்டார். நண்பரின் மாமனாரும்கூட அப்படித்தான் கேட்டார். இவர்களுக்கு எவனாக இருந்தாலும் முதலில் வீடு வாங்கவேண்டும். அப்புறம் கார் வாங்கவேண்டும். “அனுபவத்தில சொல்றேன். அன்னைக்கே சுதாரிச்சு அந்த எடத்தை எட்டு லட்ச ரூபாய்க்கு நான் முடிச்சிருந்தா இன்னைக்கு அதோட மதிப்பு பத்து கோடி” என்று அவர்கள் சொல்வதை நாம் சிரத்தையுடன் கவனிப்பதாக நடிக்கவேண்டும்.

அழுத்தம் வீட்டிலிருந்து மட்டும் இல்லை. வேலைசெய்யும் நிறுவனத்திலும் சம்பளத்தின் ஒரு பகுதியை சலுகையாக வடிவமைத்திருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட பணிநிலைப் பிரிவை எய்தியதும் கார் வாங்க இரண்டரை லட்சம் ரூபாய் தருவார்கள். வாங்கினால் உண்டு. இல்லாவிட்டால் இல்லை. எப்படி விடமுடியும்? கண்டது கடியதைப் படித்து பொதுப்போக்குவரத்தை மட்டுமே பயன்படுத்தும் ஒரு சமூக அக்கறையாளனாகத் தன்னை நம்புபவனுக்கு தர்ம சங்கடமான நிலைதான். இப்படித்தான் ஏற்கனவே சம்பளத்தில் கணிசமான பகுதியை நிறுவனப் பங்குகளாக கொடுத்தார்கள். இத்தகைய சூதாட்டத்தில் ஈடுபடவே கூடாது என்ற வைராக்கியத்தில் இருந்தவனை இழக்கவிருந்த தொகையின் மதிப்பு மசியவைத்தது.

காலையிலேயே எதிர்ப்பட்ட பக்கத்துவீட்டு பர்ன்வால் கார்வாங்கிக் கொள்ளலாமே என்று கேட்டார். மத்திய பொதுத்துறை நிறுவனம் ஒன்றில் துவக்கநிலை பொறியாளர் வேலை பார்க்கிறார். அவரது அலுவலகம் மூன்றே கி.மீ தூரத்தில் கட்வாரியா சராயில்தான் இருக்கிறது. பொடிநடையாகவே போய்விடலாம். ஆனால் காரில்தான் போகிறார். ‘தில்லியில் கார் இல்லாதவனை எவன் மதிப்பான்’ என்பவர். கொஞ்சம் சென்டிமென்டும் பார்க்கிறவர். இவனைப் பார்த்துவிட்டுப்போன ஒரு நாளில் ஏதோ நல்லது நடந்துவிட்டது என்று சந்தோசமாகச் சொன்னதிலிருந்து எப்போது எதிர்ப்பட்டாலும் அன்று அவருக்கு நல்லது நடக்கவேண்டுமே என்று பதற்றமாக இருக்கிறது. இன்றைய நாள் அவருக்காவது இனிய நாளா தெரியவில்லை.

 **********

இரவுப்பணியில் பர்ன்வால் இருந்தார். இரவு பத்தே முக்காலாக இரண்டு நிமிடம் இருந்தது. மின் தொகுப்பில் இணைந்துள்ள பளு அளவை தேசிய அளவில் ஒழுங்குபடுத்தும் வேலை. இந்த மின்சாரத்தை சேமித்துவைத்து பிறகு பயன்படுத்துகிற தொழில்நுட்பம் எல்லாம் வீட்டளவுக்குத்தான் வந்திருக்கிறது. இன்னும் நாட்டளவுக்கு அதிகம் வரவில்லை. உற்பத்திக்குத் தகுந்த நுகர்வு இல்லையென்றால் வேறு பக்கம் திருப்பிவிடவேண்டும். இல்லையென்றால் உற்பத்தியை நிறுத்திவிடவேண்டும். இங்கு தேவை இல்லாமல் இல்லை. எல்லாருக்கும் கொண்டுபோய் சேர்க்கிற உள்கட்டமைப்புதான் இல்லை.

 கிழக்கு மண்டலத்திலிருந்து அபயக்குரல் ஒலித்தது.

 “இந்த அஞ்சு லைனும் ஓவர்லோடா இருக்கு. ஏதாவது ஒண்ணு ட்ரிப் ஆனாலும் பெரிய சிக்கலாகிரும்”

 பர்னவால் “அச்சா, அச்சா” என்றார்.

 “அதுனால நீங்க மேற்கு மண்டலத்துல சொல்லி – கண்டிப்பா அவங்ககிட்ட சொல்லி – கொஞ்சம் உடனடியா அவங்களோட உற்பத்தியைக் குறைக்கச் சொல்லுங்க”

 “அச்சா, அச்சா”

 “இல்லைன்னா, முடிஞ்சா நம்ம வடக்கு மண்டலம் வழியா பவரை பாஸ் ஆன் பண்ணச் சொல்லுங்க”

 “வடக்கு வழியா முடியாது. குவாலியர் – ஆக்ரா லைன் ஒண்ணு அவுட்டு”

 “ஆங். அப்ப முடியாதுன்னா மேற்கு மண்டலம் உற்பத்தியை நிறுத்தணும்”

 “அச்சா, சரி, சரி”

 “சரிதானே?”

 “ஓகே. ஓகே”

 “அப்படி இல்லைன்னா இன்னைக்கு கண்டிப்பா சிஸ்டம் போயிரும்”

 “சரி சார். செய்றேன்.”

 “இதை சீரியஸா எடுத்துக்குங்க”

 வாங்கிய மின்சாரத்துக்கு காசு கொடுக்க முடியாமல் திணறும் மாநிலங்கள் ஊரகப் பகுதிகளில் மின்சாரத்தை அணைத்துப் போட்டுவிட்டு சொன்ன அளவு மின்சாரத்தை எடுத்துக்கொள்ளாமல் திணற அடிக்கிறார்கள். தேர்தல் நேரம் அது இதுவென்று சொன்ன அளவைவிட அதிகமாக இழுத்து சில மாநிலங்கள் திணறடிக்கின்றன. உற்பத்தி செய்வது ஓரிடம். நுகர்வு குவிந்திருப்பது வேறிடம். சமநிலை இல்லாவிட்டால் நாடே இருளில் மூழ்கிவிடும். இடையில் ஓரிரு இணைப்புகளை வைத்து ஒப்பேற்றுகிறார்கள். கோடிகோடியாய் கொள்ளை அடிக்கிறவர்கள் எல்லாம் சேர்ந்து செய்கிற கூட்டுச்சதிகளுக்கு எங்களை மாதிரி ஆட்களைப் பாடாய்ப்படுத்துகிறார்கள் என்று நொந்துகொண்டார்.

மேற்கு மண்டலத்தில் பணியில் இருப்பவர் மூத்த அதிகாரி. பர்னவால் பெரிய அளவில் வலியுறுத்தமுடியாது. அவர் இந்த அலுவலகம் வந்து பொதுமேலாளராக, செயல் இயக்குனராக உட்காரும் நாளில் இவருக்கு சிக்கலாகிவிடும்.

சரியாக முக்கால் மணிநேரம் கழித்து மறுபடியும் கிழக்கு மண்டலத்தில் பணியில் இருப்பவர்.

 “ஜனாப், மேற்கே இருந்து ஒரு வித்தியாசமும் இல்லை. பேசினீங்களா..”

 “மேற்கு மண்டலம் ஒரு..”

 “நீங்க கொஞ்சம் அவங்க என்ன பண்றாங்கன்னு விசாரிங்க”

 “சார். அவங்ககிட்ட…”

 “அப்படியெல்லாம் விட்டா நடக்காது சார். அவங்களுக்குத் திரும்பத் திரும்ப மெசேஜ் கொடுங்க”

 “சரி, சரி, நான் பேசுறேன்”

 “இல்லை, இல்லை. பேசினா ஒண்ணும் நடக்காது. திரும்பத் திரும்ப மெசேஜ் கொடுங்க”

 “கொடுக்கிறேன், கொடுக்கிறேன்”

 “எங்கெல்லாம் குறைவா இழுக்கிறாங்களோ அங்கெல்லாம் குறைக்கச் சொல்லுங்க”

 “சரி, சரி”

 தயங்கித் தயங்கி பர்ன்வால் மேற்கு மண்டலத்தில் இருப்பவரைக் கூப்பிட்டார்.

 “சார். வந்து உங்களோட இந்த அண்டர்டிராயல் கொஞ்சம் குறைக்கமுடியுமா, சார்”

 “ம்ம்”

 “ஏன்னா சார். குவாலியர் ஆக்ரா ஒண்ணு ஷட்-டவுன்ல இருக்கு. அதுல ஓவர்லோடு ஆகுது. இந்த கிழக்கு மண்டலத்துல எல்லா லைனும் ஓவர்லோடுல இருக்கு சார்”

 “உங்க ஃப்ரீக்வென்சியும்தான் கம்மியா இருக்கு”

 “அது ஒரு பக்கம் சார். கொஞ்சம் சிஸ்டம் கன்ஸ்ட்ரைன்ட் ..என்ன பண்றது சார் இந்த கிழக்கு லைன் எல்லாம்..”

 “வடக்கை ஓவர்ட்ராயல் பண்ணவேணாம்னு சொல்லவேண்டியதுதான”

 “அவருக்கும் மெசேஜ் கொடுத்துருக்கேன் சார். நீங்களும் கொஞ்சம் முடியுமான்னு பாருங்க சார்”

அவர் ஒன்றும் செய்யவில்லை. சொன்னமாதிரியே இரவு வடக்கு மண்டலம் முழுமையும் பிடுங்கிக்கொண்டது. மறுநாள் தொகுப்பில் முழுமையாக இணைக்கப்படாத தெற்கு மண்டலம் தவிர்த்து நாடே மின்சாரம் இன்றித் ‘தவித்தது’ (என்று தில்லியில் இருப்பவர்கள் சொன்னார்கள்). வல்லரசுக் கனவுகளில் மிதந்தவர்கள் மின்சாரம் தாக்கியதுபோல குதித்தார்கள். குய்யோ முறையோ என்று கொந்தளித்தார்கள்.

 பர்னவால் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

 ********************************

 ஒன்பதுமணி வரை துணை அலகுகளில் இருந்து பதில் வராமல் போகவே கார்த்திக் ஒவ்வொருவராகக் கூப்பிட ஆரம்பித்தான். துணை அலகு ஒன்றில் வேலையில் இருப்பவன் நேரடியாக தலைமை அலுவலகத்தில் இருந்த தமது ‘நம்பத் தகுந்த வட்டாரத்தில்’ பேசியிருக்கிறான். உண்மையில் நாளை மறுநாள்தான் செயல் தலைவர் அமைச்சரைச் சந்திக்கப்போகிறாராம். எங்கே தாமதம் செய்துவிடுவார்கள் என்றுதான் மறுநாள் என்று பொய்சொல்லி இரவோடு இரவாக நம்மிடம் கேட்டிருக்கிறார்கள். இந்த தகவலைக் கார்த்திக் ஓடோடி மேலதிகாரியிடம் சொன்னான். அவர் தலைமை அலுவலகத்தில் உள்ள ‘தமது நம்பத்தகுந்த வட்டாரத்தை’ விசாரித்து உறுதிப்படுத்திக்கொண்டார். ‘சரி, கிளம்புவோம். நாளைக் காலை முதல் வேலையாக அனுப்பிக்கொள்ளலாம். இந்த விஷயத்தை நீ மற்ற துணை அலகுகளில் சொல்லவேண்டாம். அவர்கள் இரவே அனுப்பட்டும்.’ என்றார்.

 மறுநாள் உற்சாகமாக இருந்தார். வலுவான ‘பாய்ண்ட்’ ஒன்று கிடைத்துவிட்டது. வேறெதுவும் விஷயமே தேவையில்லை. மின் தொகுப்பு மொத்தமாக செயலிழந்த இந்த ஒன்றே போதும். இப்படி எல்லாம் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க அறுபதாயிரம் கோடி முதலீடு வேண்டும். அதில் எங்களுக்கு சில ஒப்பந்தங்கள் வேண்டும் என்று சொன்னாலே போதும்.

 *************************

பர்ன்வால் பெரிதாகக் கவலைப்பட்ட மாதிரி தெரியவில்லை. அவருக்கு விசாரணை அறிக்கைகள் மீது ஏதோ நம்பிக்கை இருந்தது. “மின்சாரம் இல்லாம ரெண்டு நாளா ரொம்ப சிரமாப் போச்சுல்ல” என்று கார்த்திக் பொதுவாகச் சொன்னபோது “எங்க சொந்த ஊரு உ.பி- யில ஆசம்கர் மாவட்டத்துல. ஒருநாளைக்கு ஆறு மணிநேரம் மின்சாரம் கிடைச்சா அதுவே பெருசு. இன்னைக்குவரைக்கு அப்படித்தான். இந்தியாவில முப்பது கோடிப் பேருக்கு இன்னும் மின்சாரமே போய்ச்சேரல” என்று சற்று எரிச்சலாகச் சொன்னார். “அதுதானே, ஏன் இந்த ஆங்கில ஊடகங்களும் மேலை நாட்டு ஊடகங்களும் இப்படிக் குதித்தன” என்று கார்த்திக் ஆச்சரியப்பட்டான்.

 பேச்சு மறுபடியும் காருக்கு வந்தது. இவன் ‘பொதுப்போக்குவரத்தா? சொந்தக் காரா?’ குழப்பத்தை சொன்னான். “எதுக்கு கவலைப் படுற? கார் பூலிங் பண்ணிக்க. கூட வேலை செய்ற யாரையாவது கூட்டிக்கிட்டுச் சேர்ந்துபோங்க’ என்றார். சரிதான். கொஞ்சம் மனச்சான்றுக்கு மருந்திட்ட மாதிரி இருக்கும். ஃபெர்னாண்டோ சோரன்டினோவின் கதையில் வரும், கதைசொல்லியை சதா தலையில் குடையால் அடித்துக்கொண்டேயிருக்கும் ஒருவனை சற்று அமைதிப்படுத்தியதைப் போலிருந்தது.

வக்காலத்து

ஒரே வளாகத்துக்குள் பக்கத்துப் பக்கத்து வீடுகளில் இருவர் வசித்தனர். ஒருவன் நலங்குன்றி நோஞ்சானாகிவிட, அதுதான் சமயம் என்று வீட்டைப் பிடுங்கிக்கொண்டு இவனை  அடித்துத் துரத்திவிடப் பார்த்தான் வலுவாக இருந்தவன். யாரும் உள்ளே வரமுடியாதபடி வளாகத்தின் கதவை இழுத்துச் சாத்திவிட்டு இவனை அடிக்கத் தொடங்கினான். வேடிக்கை பார்க்க ஆட்கள் சூழ்ந்தனர். சிலர் நமுட்டுச் சிரிப்புடன் கமுக்கமாக சிரித்தனர். சிலர் ‘அல்லையில் போடு’, ‘டங்குவாரை அத்துரு’ என்று உற்சாகப்படுத்தினர். இன்னும் சிலரோ ‘ஒரே போடாய்ப்போட்டுவிடு’ என்று ஆயுதங்களை அள்ளிவீசினர். இளைத்த நேரத்தில் எளியவனை வலியவன் தாக்குதல் காணப்பொறாது பலர் கண்ணீர் சிந்தினர். கதறி அழுதனர். அடிப்பதை நிறுத்துமாறு கூக்குரல் எழுப்பினர். ரசித்து பார்த்துக்கொண்டிருந்த சிலர் எரிச்சலாகி இவர்கள் பக்கம் திரும்பி நைச்சியமாய் ‘நீங்கள் இங்கிருந்து கத்தி என்ன ஆகப்போகிறது?’ என்று தர்க்கம் பேசினர். இன்னும் சிலர் “‘அய்யோ, கொல்கிறானே’ என்று கத்துகிறீர்கள். அதற்குள் நீங்களாக அவ்வாறு கற்பிதம் செய்வது தவறு. அடிக்கிறான் அல்லது தாக்குகிறான் என்றுதான் சொல்லவேண்டும்” என்று தொழில் நுணுக்கம் பேசினர். இவர்களோ “கதவை சாத்திக்கொண்டால் நாங்கள் கத்துவது கேட்காமல் போகாது. அவன் வெளியே வராமலேயே இருந்துவிட முடியாது. எல்லாவற்றுக்கும் மேல் நாங்கள் மனிதர்கள். கொடுமை கண்டு பொறாது எங்களால் முடிந்ததையாவது செய்வோம்” என்றனர். அதுஅது அததுபாட்டுக்கு நடந்துகொண்டுதான் இருந்தது.

இளவட்டப் பலி

சக்தி விபத்து நடந்த இடத்திலேயே இறந்துவிட்டான் என்பது தெரிந்தபிறகு கவலையெல்லாம் சுரேஸ் பிழைத்துக்கொண்டானா என்பதிலேயே இருந்தது. மாறுபட்ட தகவல்கள் வந்துகொண்டிருந்தன.  பனங்கூட்டத்திலிருந்து திண்டுக்கல்லுக்குப் பேருந்தில் வந்துகொண்டிருந்தபோது திருப்பூரில் இருக்கும்  செல்வக்குமார்தான் முதலில் அலைபேசியில் கூப்பிட்டுச் சொன்னான்: “அண்ணே, கேள்விப்பட்டியா, சுரேசும், வெள்ளையன் மகன் சக்தியும் வண்டில போகும்போது பஸ்ஸுல அடிபட்டுட்டான்ய்ங்களாம்ல”. சுரேசுக்குக் காலில்தான் அடி என்று முதலில் சொன்னார்கள். பிறகு அவனும் இறந்துவிட்டான் என்றார்கள். கவலைக்கிடமாக இருப்பதாக ஒருவரும், பேசிவிட்டானாம் என்று இன்னொருவரும் விசாரித்தபோது கூறினர்.  ஷேர் ஆட்டோவில் ஊரை நெருங்குகையில் ஓட்டுனர் அதே இருக்கையில் பக்கத்தில் ஒடுங்கி உட்கார்ந்திருந்தவரிடம் “இன்னைக்கு அய்யங்குடியில நல்ல ஓட்டம். பூராம் அய்யங்குடி – பெரியாஸ்பத்திரி. ரெண்டு பயலுக ஆக்ஸிடெண்ட் ஆயிட்டான்ய்ங்களாம், ஒருத்தன் அவுட்டாம்” என்றார். பக்கத்தில் இருந்தவர் “ரெண்டு பேரும் காலியாம்ணே. பாலஜோதியில ஓடுறவரு அய்யங்குடிக்கார்தான. அவர் சொன்னாரு” என்றார்.

**************

தெருவுக்குள் நுழைந்தபோது வேறு சாதிக்காரர்களைத் தவிர நடமாட்டம் தெரியவில்லை. எல்லாரும் அரசு மருத்துவனையில் இருப்பார்கள். அப்போதுதான் ஏதோ திருமண வரவேற்புக்குப் போய்விட்டு வந்த ஆறுமுகம் டி.வியைப் போட்டு ‘நீயா நானா’ வைத்த சத்தம் கேட்டது. அவரது மனைவி ஒலியளவைக் குறைத்துவைத்துப் பார்க்கச் சொல்லிக்கொண்டிருந்தார். இரண்டு மூன்று நாட்களுக்கு சன்னமாக வைத்துதான் பார்ப்பார்கள்.

பூவாயம்மன் கோயில் தெருவின் பெயரில் நிதி ஒதுக்கப்பட்டு மேலத்தெருவில் வைக்கப்பட்டிருந்த சிறு மின்விசை நீர்த்தொட்டியின் குழாயைத் திருகிவிட்டு யாரோ குளிக்கும் சத்தம் கேட்டது. முரளிதான் மருத்துவமனையிலிருந்து திரும்பியிருந்தான். அருகில் சென்றபோது உதட்டைப் பிதுக்கி தலையை ஆட்டி ஓசை வெளிவராமல் ‘முடிஞ்சிருச்சு’ என்பதுபோல ஏதோ சொன்னான். அதற்குள் நான்கைந்து பேர் கூடிவிட்டார்கள். அவர்கள் வீட்டு மொட்டைமாடியில் இருந்து சூர்யாவும் எட்டிப்பார்த்தது.  “அப்பயே ஒண்ணும் இல்ல மாமா. இவன்ய்ங்க சும்மா மூக்கில குழாயை மாட்டிவிட்டு வயிறு மட்டும் மேல போய்க்கிட்டு வந்துக்கிட்டு இருந்துச்சு. அப்புறம் ஏழு மணிக்கு இவனையும் மார்ச்சுவரிக்கு எடுத்துட்டுப் போய்ட்டான்ய்ங்க” என்றான்.

அவனுக்குக் கோரத்தை விவரிப்பதில்தான் ஆர்வம் இருந்தது. இருசக்கர வண்டியிலிருந்து தூக்கிவீசப்பட்டு மோதியதில் எப்படி சக்தியின் ஒருபக்க கன்னச்சதை, தலைமுடி, சட்டையெல்லாம் பேருந்திலேயே ஒட்டிக்கொண்டது, அவனைத் தூக்கியபோது உறைந்திருந்த ரத்தக்கட்டி எப்படி ‘பொளக்’கென்று சாலையில் சிந்தியது, பிணவறையில் கொலையுண்டு கிடந்த ஒருவனின் வாயில் நுழைந்த ஈ எப்படி அறுபட்ட கழுத்து வழி வெளியேறியது என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தான்.

******

“பாவம், பிள்ளைகளைலாம் அப்படித் தூக்கிக்கொஞ்சுவான். அவள் அக்கா அக்கானு கையைப் பிடுச்சுகிட்டு விடவேயில்லை. ‘தினமும் மூணு சட்டை மாத்துவானே. செண்ட் போடாம வெளிய கெளம்பமாட்டானே. இப்ப கண்ணாடிகூட அவனை எங்கே எங்கேனு கேட்குமே’னு அழுதுக்கிட்டு கெடக்கா”

 “அவனுக்குப் பெறந்தநாளாம். கத்திரிக்காய் புடிங்கிக்கிட்டுர்ந்தவன இவந்தானாம்ல கூட்டிட்டுப்போனான்”

 “இங்க கடலங்குளத்துக்கும், சடையநல்லூருக்கும் ஊடால இருக்க சந்தனமாரியம்மன் கோயில் வளைவுகிட்டயாம்ல. அந்த மேட்டுல சும்மாவே எதுக்க வர்ற வண்டி தெரியாது”

 “உரப்பொடி வாங்கப் போனான்றாக. காசெடுக்கப் போனான்றாக. இங்கனக்குள்ள சந்தைகிட்டப் போயிருக்கலாம். எதுக்குத்தான் சடையநல்லூருக்குப் போனான்ய்ங்களோ?”

 “ஞாயித்துக்கிழம வந்தாலே இந்த குடியிலதானத்தா கூடிர்றான்ய்ங்க”

யாரும் தூங்கப்போகிற மாதிரி தெரியவில்லை.

******

எதிர்ப்பட்ட கே.ஜே வை நிறுத்தி பாஸ்கரன் விசாரித்துக்கொண்டிருந்தார். “ஞாயித்துக்கெழமைண்ணே. இனிமே எங்க? நாளைக்குத்தான் கொடுப்பாங்க. அதிலயும் இன்னைக்கு ஒரே நாள்ல பதினேழு கேசு. இருக்க தலவலி பத்தாதுன்னு இவன்ய்ங்க வேற பஸ்ல கல்ல விட்டு கண்ணாடியை ஒடைச்சுப்புட்டான்ய்ங்க”

 “அடங்கொ*** **டைகளா. யாரு?”

 “பத்து பதினைஞ்சு பேரு கடலங்குளம் பார்ல இருந்தவன்ய்ங்க. எவன் ஒடச்சான்னு தெரியல. எஸ். ஐ அம்மா ஏதோ உணர்ச்சிவசப்பட்டு செஞ்சுட்டான்ய்ங்கன்னு விடுற மாதிரிதான் இருந்துச்சு. கதிரவன் மகன் லோகு முண்டிக்கிட்டு நாந்தான் ஒடச்சேன். யார் என்ன செய்வான்னு சலம்புன்னான். இப்ப மூணு பேத்த புடிச்சு வைச்சிருக்காங்க. பி.ஆர்.சி மேனேஜர் 13,000 ரூபாயைக் குடுத்திட்டுப் போயிருங்கன்னு அப்பயே சொன்னாரு. ரொம்ப ஆடுறான்ய்ங்கண்ணே.”

 “மில்லுல கூட வேலைபார்த்தவர் காலையிலயே போன் பண்ணாப்ல. என்னண்ணே கடலங்குளம் டாஸ்மாக்ல உங்க ஊர்க்காரன்ய்ங்க ஆட்டம் ஓவராயிருக்குன்னு”

 “நேத்து நன்றி தெரிவிக்க வந்தார்ல”

 “ஓஹோ. அப்படிச் சொல்லுங்க. என்னத்தையோ காசைக்கொடுத்து எப்.ஐ.ஆர், ரிமாண்டுனு இல்லாமக் கூட்டிட்டுவந்துருங்கண்ணே. படிக்கிற பயலுக”

*******

மறுநாள் சுடுகாட்டிலும் ஒரே அலப்பரையாகத்தான் இருந்தது. ‘தண்ணி’ தாராளமாகப் புழங்கியது. வேனிலிருந்து நாங்கள்தான் இறக்குவோம் என்று பதினைந்து இருபது பையன்கள் முண்டியடித்து உள்ளே ஏறினார்கள். அழுதுகொண்டு சுடுகாட்டுக்கூரையைப் பிய்க்க முயன்றார்கள். ‘அவன்ய்ங்களே போய்ட்டான்ய்ங்க. ஒனக்கு செல்ஃபோன் எதுக்கு?’ என்று எவனது செல்போனையாவது பிடுங்கி சிதையில் போட்டுவிட்டால் சும்மா இருப்பார்கள் என்று தோன்றியது.

சுரேசின் அப்பாவிடம் உடன் வேலைசெய்பவர்களுக்கெல்லாம் தகவல் சொல்லிவிட்டதாக ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார். தலையில் துண்டை போட்டு குத்தவைத்து உட்கார்ந்திருந்த சக்தியின் அப்பா ஒருவரிடம் ‘கல்யாணம் ஆகாத இளவட்டப் பயலுகளுக்கெல்லாம் பால் தொளிக்கிற வழக்கமில்லையாம். எல்லாரும் சொல்றாக’ என்று விளக்கிக்கொண்டிருந்தார்.

****

மனோகரன் தினத்தந்தி மாவட்டச்செய்திகளில் விஷயம் வந்திருப்பதைச் சொல்லி சத்தமாக வாசித்தார்:

‘அய்யங்குடி கிராமம் வெள்ளையன் மகன் சக்திவேல் (24). அதே கிராமத்தைச் சேர்ந்த குமரப்பன் மகன் சுரேஸ் (23). இவர்கள் இருவரும் கடலங்குளம் சடையநல்லூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த அரசுப் பேருந்து மோதியது. இதில் சக்திவேல் சம்பவ இடத்திலேயே பலியானார். சுரேஸ் அரசுப் பொதுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையே 108 ஆம்புலன்ஸ் வரத் தாமதமானதால் ஆத்திரமடைந்த பொதுமக்களில் சிலர் அந்த வழியாக வந்த நகரப் பேருந்துமீது கல்லெறிந்ததில் பேருந்தின் பின்பக்கக் கண்ணாடி உடைந்தது. இதுகுறித்து சடையநல்லூர் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்’

அதே பக்கத்தில், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அய்யங்குடி, இப்ராகிம்சந்தை, சந்தோஷ் நகர், முதலைக்குளம் பகுதிகளில் அதற்கு முந்தைய தினம் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டுப் போயிருந்த செய்தியும் வெளிவந்திருந்தது.

மொழிபெயர்ப்பின் தொடுஎல்லை

கடந்த ஜூன் 14,15ல் திண்டுக்கல் நொச்சியோடைப்பட்டியில் எஸ்.ரா-வும் டிஸ்கவரி புக்பேலஸும் இணைந்து கதைகள் பேசுவோம் (2): நாவல் இலக்கிய முகாம் நடத்தியதை நீங்கள் அறிந்திருக்கலாம். அதில் மொழிபெயர்ப்பாளர் சா.தேவதாஸ் மொழிபெயர்ப்பின் சிக்கல்கள் பற்றிய ரோமானியக் கவிதை ஒன்றிருப்பதாகக் குறிப்பிட்டு அதன் சாரத்தைச் சொன்னார்.

கொஞ்சம் தேடியதில் அது மரீன் சொரெஸ்கு எழுதிய ஒரு கவிதை என்றறிந்ததோடு அதன் இரு ஆங்கில வடிவங்களும் கிடைக்கப்பெற்றேன். எனது தமிழ், ஆங்கிலம், கவிநுகர்திறன் ஆகியவற்றின் போதாமைகளை நன்கு உணர்ந்திருந்தபோதும் அதைத் தமிழில் எழுதிப்பார்க்கத் தயங்கவில்லை.  கவிதையே மொழிபெயர்ப்பின் போதாமைகள் பற்றியது என்றுதானே சொன்னார்கள்! அந்தக் கவிதை இங்கே:

 மொழிபெயர்ப்பு

நான் தேர்வெழுதிக்கொண்டிருந்தேன்

வழக்கொழிந்த மொழியொன்றில்

என்னையே மொழிபெயர்க்கவேண்டியிருந்தது

ஒரு மனிதனிலிருந்து மந்தியாக

 

நான் சுற்றிவளைத்துத் தொடங்கினேன்

காட்டிலிருந்து ஒரு பனுவலை

முதலில் மொழிபெயர்த்து

 

என்றாலும், என்னையே நான் நெருங்கநெருங்க

மொழிபெயர்த்தல் மென்மேலும் கடினமாகியது

கொஞ்சம் முயற்சியெடுத்து

சரிமாற்றுச்சொற்களைக் கண்டுபிடித்தேன்

கால்விரல் நகங்களுக்கும்

பாத ரோமங்களுக்கும்

 

முழங்காலுக்கு வரும்போது

திக்கித்திணற ஆரம்பித்தேன்

இதயத்தில், எனது கை நடுங்கியது

கதிரவனில் கறைசெய்துவிட்டேன்

 

சரிசெய்ய முயற்சித்தேன்

நெஞ்சக முடி கொண்டு

கடைசியில் தோற்றுப்போனேன்

ஆன்மாவை அடைந்தபோது

– மரீன் சொரெஸ்கு

கரையாத கரகமும் உயிர்பெற்ற சிரசும்

ஒரு காலத்தில் கோபக்கார முனிவன் ஒருவன் காட்டில் தனது மனைவி, ஐந்து பிள்ளைகளுடன் வசித்துவந்தான். வயது ஏறியதே தவிர மனைவியை முழுமையாக நம்பினானில்லை. அவளது நன்னடத்தையை உறுதிசெய்து கொள்ள ஒரு வழி கண்டுபிடித்து வைத்திருந்தான். அவள் தினமும் ஆற்றிற்கு தண்ணீர் எடுக்க வெறுங்கையோடு செல்லவேண்டும். கரையில் இருக்கும் பச்சை மண் எடுத்துக் குடம் செய்து அதில் தண்ணீர் மொண்டு வரவேண்டும். அவள் கற்புநெறி தவறாமல் இருந்தால் குடம் கரையாமல் நிற்கும். அப்படித்தான் ரொம்ப நாளாய் நின்றது.

சோதனையாக ஒரு நாள் அவள் தண்ணீர் கோர குனியும்போது அப்போது பார்த்து வானில் பறந்துசென்ற அழகர்கள் நீரில் தெரிய இமைப்பொழுது அசந்துவிட்டாள். அதுதான் சாக்கு என்று குடம் கரைந்துவிட்டது. பயந்துபோன கிழவி கிழவனுக்குப் பயந்து காட்டிலேயே பொழுதுபோக்கினாள். அவள் திரும்பிவரக் காணாத முனிவன் தனது தவவலிமையை இந்த தலைபோகிற காரியத்துக்குப் பயன்படுத்தி என்ன நடந்தது என்று கண்டுபிடித்துவிட்டான். மூத்த பிள்ளைகளை ஒவ்வொன்றாக அழைத்து தாயைத் தேடி தலையைக் கொய்யச் சொல்ல அவர்கள் ஒவ்வொருவரும் மறுத்து கல்லாய்ச் சபிக்கப்பட்டார்கள். அப்பனுக்குத் தப்பாமல் பிறந்த கடைசிப்பிள்ளை கல்லாகப் பயந்தோ என்னவோ தாயைக் கொல்ல கோடரி கொண்டு ஓடியது.

அங்கு அவளோ ஆவாரங்குலை சேகரிக்க வந்த நம்மன்னை பின் சென்று ஒளிந்தாள். அடைக்கலம் நாடி வந்தவருக்கு அபயம் அளிக்கும் நம்மன்னை என்னைக் கொன்றுவிட்டுப் பின் உன் அன்னையைக் கொள் என்றார். அந்த மூடனும் இருவரையும் வெட்டிச் சாய்த்ததோடு நில்லாமல் அப்பன் நம்பமாட்டானே என்று தாயின் தலையைக் கையோடு எடுத்துச் சென்றான்.

சொன்னதைச் செய்துவிட்டானே சொட்டைவால் குட்டி என்று மகிழ்ந்த அப்பன்காரன் இரண்டு வரம் தருவேன், என்ன வேண்டும் கேள் என்றான். தான் ஆடாவிட்டாலும் தன் சதையாட முதல் வரமாக அண்ணன்களை உயிர்ப்பிக்கவேண்டும் என்றான். அவ்வாறே செய்தான். இரண்டாவது வரமாக தனது அம்மையை உயிர்ப்பிக்க வேண்டும் என்றான். தலையைக் கொண்டுபோய் உடலோடு ஒட்டு, உயிர்த்துக்கொள்ளும் என்றான். இவனும் தலையைத் தூக்கிகொண்டு தலைதெறிக்க ஓடினான். எவளென்று தெரியாவிட்டாலும் அவளைக் காப்பாற்ற உயிர்விட்டாரே நம்மன்னை. அவரைப்பற்றி அப்போதும் நினைத்தானில்லை. ஆனால் இயற்கை நினைத்தது.  அவசரத்தில் நம்மன்னை உடலில் அவன் அன்னை தலையைவைத்து உயிர்ப்பித்துவிட்டான்.

அறியாத ஒருத்திக்காக முதலில் சிரசு தந்தார், பிறகு உடலும் தந்தார்  நம்மன்னை. அது அந்த யுகத்தின் தர்மம்.