ஈரம்பிரியன் மதுரைக்காரன்

அல்லது ஈரம்பிரியை மதுரைக்காரி. நேற்றைய தமிழ் ‘தி இந்து’ நாளிதழில்  அழிவின் விளிம்பிலுள்ள நன்னீர் தாவரங்கள் பற்றி ஒரு கட்டுரை வந்தது. அதில் ஒரு சிற்றினத்தின் அறிவியல் பெயர் ‘மதுரையைச் சேர்ந்தது’ என்பதைக் குறிக்கும்விதமாக ஹைக்ரோஃபிலா மெஜுரென்சிஸ் (மதுரென்சிஸ்?) என்று இடப்பட்டிருப்பதை அறிந்து ஆர்வம் மிகுந்தது.

கூடுதல் விவரங்கள் தேடியதில் அந்தச்செடி இயற்கையைப் பேணுதற்கான பன்னாட்டு ஒன்றியத்தின் (IUCN) சிவப்புப் பட்டியலில் “உய்ய அச்சுறுத்த நிலை” (critically endangered)- யில் உள்ள ஒன்று எனத் தெரிகிறது. அதாவது மிகவும் அருகிப்போய், அழிவின் விளிம்பில் உள்ள நிலையில் இருந்து இல்லாதொழியும் நிலைக்கு மாறுவதான கட்டம்.

1958ல் பாலகிருஷ்ணனும், சுப்பிரமணியமும் மதுரை அழகர்மலையில் நல்லகுளம் என்ற இடத்தில் இச்சிற்றினத்தைக் கண்டறிந்து வகைப்படுத்தினராம். இவர்கள் ஸ்பெயினில் பிறந்து பம்பாய், பூனா, ஆக்ரா, கல்கத்தாவில் தாவரவியல் பயிற்றுவித்து இந்திய தாவரவள அளவைநிறுவனத்தின் இயக்குனராக உயர்ந்த பத்மஸ்ரீ மறைதிரு.சாந்தாபாவ் நினைவாக சாந்தாபாவுவா என்றொரு பேரினம் உருவாக்கி சாந்தாபாவுவா மதுரென்சிஸ் (santapaua madurensis) என்று பெயரிட்டிருக்கிறார்கள். பிறகு கார்த்திகேயனும் மூர்த்தியும் 2010ல் இதை ஹைக்ரோஃபிலா பேரினத்தில் இணைத்து ஹைக்ரோஃபிலா மதுரென்சிஸ் என்று மாற்ற அவ்வாறே ஏற்றுக்கொள்ளப்பட்டு வழங்கிவருகிறது. இரவிக்குமார் என்பவர் 1984ல் கடைசியாக இச்செடிகளைச் சேகரித்திருக்கிறார். பிறகு எங்காவது அடையாளம் காணப்பட்டதா என்பது பற்றிய சரியான தகவல்கள் தெரியவில்லை. கடைசியாகப் பார்த்த இடத்தில் சுமார் 50 செடிகள்தான் இருந்தனவாம். எனவே இப்போதும் இவ்வினச் செடி இருக்குமா என்பதே ஐயத்திற்கிடமானது. இதை அழியாது பேணுவதற்கான எந்த நடவடிக்கையும் இல்லையென்றும், இதன் தற்போதைய பரவலைக் கண்டறிவது உடனடித் தேவை என்றும் தெரியவருகிறது. மேலும் விவரங்கள் கேட்டு ஒரு தாவரவியல் பேராசிரியருக்கு மின்மடல் அனுப்பியிருக்கிறேன். ஏதாவது சொல்கிறாரா பார்க்கலாம்.

அது அப்படியே இருக்க, வேறெந்த உயிரினங்களுக்கெல்லாம் இவ்வாறு மதுரைக்காரர்களாக அறியப்படும் வாய்ப்பு கிட்டியிருக்கிறதென்று தேடினேன். பழைய மதுரை மாவட்டத்தின் பழனி மலையில் கொடைக்கானலில் கண்டறியப்பட்ட ப்ளாட்டிப்ளெக்ட்ரூரஸ் மதுரென்சிஸ் (platyplectrurus madurensis)-இன்ஆங்கிலப் பொதுப்பெயரை சொல்லுக்கு சொல் பெயர்த்தால் திருவிதாங்கூர் மலை முள்வால் பாம்பு என்று வருகிறது. ஊட்டிப் பாம்பு போலத் தோற்றமளிக்கிறது. தெரிந்தவர்கள் விளக்கலாம். குரோடலேரியா மதுரென்சிஸ் (crotalaria madurensis) என்ற மூலிகைச்செடி மற்றொன்று. (பகன்றை அல்லது கிலுகிலுப்பைச் செடியோடு தொடர்புடையதாக இருக்கலாம்). இன்னும் பல பாசிச்செடிகளும் (ப்ளாட்டிடிக்டியா, ராம்ஃபீடியம், பர்த்ராமியா, ஃபேப்ரோனியா, ப்ளாஜியோதீசியம்) பழைய மதுரை மாவட்டத்திற்குரியனவாக பெயரிடப்பட்டுள்ளன.

இதில் ஒரு குழப்பம் என்னவென்றால் இந்தோனேசியாவின் மதுரா தீவுகளில் கண்டறியப்பட்டதை அடிப்படையாக வைத்தும் மதுரென்சிஸ் என்று பெயரிட்டிருக்கிறார்கள். இப்படித்தான் பால்பிஃபர் மதுரென்சிஸ் (palpifer madurensis) என்றொரு விட்டில்பூச்சியும், ரைனோலோஃபஸ் மதுரென்சிஸ் (Rhinolophus madurensis) என்றொரு வவ்வாலும், அபோக்ரிப்டோடோன் மதுரென்சிஸ் (apocryptodon madurensis) என்றொரு கடல்வாழ் உறிஞ்சுமீனும், சிட்ரஸ் மதுரென்சிஸ் என்றொரு எலுமிச்சை / ஆரஞ்சு வகையும்   மதுராக்காரர்களாகியிருக்கின்றன.

 எது எப்படியோ, மெட்ராஸ் ஐ,  நியூ டெல்லி மெடல்லோ-பீட்டா-லாக்டமேஸ் -1 என்றெல்லாம் கெட்ட பெயர் வாங்காமல் மதுரைக்கார உயிரினங்கள் சிற்றினம் சேர்ந்தமை ஆறுதலுக்குரியதே. ஆனால் இவ்வுயிர்களில் பலவும் அழிவின் விளிம்பில் இருப்பது வருத்தத்துக்கும், உடனடி செயல்பாட்டுக்கும் உரியது.