அது 2000-இல் என்று நினைக்கிறேன். திருப்பரங்குன்றம் காவல்நிலைய பேருந்து நிறுத்தம் அருகே தியாகராசர் பொறியியற் கல்லூரிக்குச் செல்லும் திருப்பத்தில் ஒரு பெரிய கட்-அவுட் வைத்து முந்தைய ஆண்டொன்றின் அதே நாளில் உயிர்த்தியாகம் செய்த தோழர்கள் செம்பு, சோமுவுக்கு நினைவஞ்சலி செலுத்தியிருந்தார்கள். அவர்கள் யார்? எதற்கு? எப்படி என்று எதுவும் தெரியவில்லை. கேட்டபோது அந்த நாட்களில் அது ஒரு ரவுடி காலேஜ் என்று மட்டும் சொன்னார்கள். நானும் அப்போது தினமலர்தான் உண்மையின் உரைகல் என்றும் துக்ளக்தான் நேர்மையான அரசியல் இதழ் என்றும் நம்பிக்கொண்டிருந்தவன். எனவே வேறு சில தருணங்களில் இந்தப்பெயர்களை வைத்து நண்பர்களைக் கிண்டல் செய்ததோடு சரி.
சென்ற ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் பாரதி புத்தகாலயம் போட்டிருந்த சிறுநூல் ஒன்றைப் பார்த்தேன். ‘ஒரு வளாகமும் சில தோழர்களும்’ என்பது தலைப்பு. ‘சோமு – செம்பு நினைவலைகள்’ என்று உபதலைப்பு. ப.கு.ராஜன் தொகுத்தது. விலை முப்பத்தைந்தே ரூபாய். தோழர்கள் சோமசுந்தரம், செம்புலிங்கம் பற்றித் தெரிந்துகொள்ள பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பின் ஒரு வாய்ப்பு.
தியாகராசர் பொறியியற் கல்லூரியில் 1967ல் சேர்ந்தவர் தொடங்கி 1988ல் முடித்த ஒருவர் வரை இந்திய மாணவர் சங்க உறுப்பினர்களாக இருந்த சிலர் தங்களது நினைவுகளையும் அனுபவங்களையும் சுருக்கமாகப் பகிர்ந்துகொள்வதன்வழி நமக்கு ஒரு சித்திரம் கிடைக்கிறது. அது தி.பொ.கவில் இந்திய மாணவர் சங்க செயல்பாடுகளை மட்டுமின்றி அந்நாட்களில் கல்லூரியில் நிலவிய அரசியல் சூழலையும், சாதியச் சூழலையும், பகடிவதைத் தொந்தரவுகளையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
கல்லூரிக்குள் நிலவிய சாதியச்சூழலில் ஒரு கட்டத்தில் இந்திய மாணவர் சங்கம் (SFI) தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான அமைப்பாக அறியப்படலாகிறது. அதன் தோழர்கள் ஆதிக்க சாதியினரால் தாக்குதலுக்குள்ளாகிறார்கள். இவர்கள் திருப்பி அடிப்பதே சரியென்று முடிவெடுக்கிறார்கள். இவ்வாறு தகராறு கனன்று வந்த நிலையில் 1981 மார்ச் 31ம் நாள் வெளியாட்களுடன் நள்ளிரவில் சாதியச் சக்திகள் புகுந்து நடத்திய தாக்குதலில் செம்புலிங்கம் கொல்லப்படுகிறார். கேள்விப்பட்டு விரைந்து வரும் சோமசுந்தரமும் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழக்கிறார். செம்பு ‘மாற்று சமூக’ப் பெண் ஒருவருடன் காதல் வயப்பட்டிருந்தார் என்ற குறிப்பு இருக்கிறது.
நாங்கள் படிக்கிற நாட்களில் வளாகத்தில் அரசியல் வாடையே அற்றுப்போயிருந்தது என்றுதான் சொல்லவேண்டும். தன்னாட்சி அந்தஸ்து பெற்ற நிர்வாகம். பெண்பிள்ளைகளுடன் பேசினால் ஏதாவதொரு ஆய்வகத்தேர்வில் தோல்வியடையச் செய்துவிடும் கலாச்சாரக் காவலர்களான சில பேராசிரியர்கள். வளாக நேர்முகத் தேர்வு மூலமாக மென்பொருள் நிறுவனத்தில் நுழைந்துவிடுவதொன்றையே வாழ்க்கை இலட்சியமாகக் கொண்ட மாணவர்கள். இளநிலை பயன்பாட்டு அறிவியல் மாணவர்கள் மட்டும் தருமபுரி பேருந்து எரிப்புச் சம்பவத்தின்போது சுவரொட்டி ஒட்டித் தண்டனைக்குள்ளானார்கள்.
இந்நூலில் கருத்துரைத்துள்ள கே.புனிதவேல், இன்றைக்கு மாணவர்கள், குறிப்பாக பொறியியல் கல்லூரி மாணவர்கள் தங்கள் சொந்த பிரச்சினைகளுக்கும்கூட போராட வருவதில்லை. அரசியலற்ற போக்கு கவலை தருவதாக உள்ளது. ஏனென்றால் கல்லூரிப் பருவத்தில் ஏற்படும் அரசியல் ஈடுபாடு, செயல்பாடு, தலைமைப் பண்புகள் பின்னர் சொந்த வாழ்க்கையிலும் பெரிதும் பயனளிப்பதாக உள்ளது என்பது எங்கள் பலரது அனுபவமாக இருக்கின்றது என்கிறார்.
இந்நூலில் ஒரு கவிதை உள்ளது. முதலாமாண்டு நினைவுநாளில் முத்துக்குமரன் பாடியது. பங்குனி இரவொன்றில் உதிர்ந்த இரு நட்சத்திரங்களை அலகில் சுமந்துகொண்டு இருள் ஜனசமுத்திர நடுவே பறக்கும் இளம்பறவைகளின் பிரகடனம் பற்றிய கவிதை. அதில் திருப்பரங்குன்ற மலை உட்கார்ந்தவாக்கில் பீடி குடித்துக்கொண்டே தூங்கும் இரவுக்காவலாளி போலத் தோற்றமளிக்கிறது.